திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் கர்நாடக முதல்வர்
பாண்டிச்சேரி:
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு கறுப்புக் கொடி காட்டமுயன்ற 1,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் கிருஷ்ணா இன்று காலை பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாண்டிச்சேரி வந்தார். அவரை பாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலைய வளாகத்தில் கிருஷ்ணாவுக்கு ரங்கசாமி காலை சிற்றுண்டி விருந்தளித்தார். இதன் பின்னர் நிருபர்களிடம்பேசிய கிருஷ்ணா,
காவிரி விவகாரம் இப்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் காவிரிப்படுகையைச் சேர்ந்த தமிழகம், கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் கூட்டுக் கூட்டத்தை நடத்தலாம்.
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் எப்போதும் போல உறவு நீடிக்கும், அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. காவிரிப்பிரச்சினையையொட்டி ஏற்பட்ட பதட்டம் காரணமாக பெங்களூரில் தமிழ் சினிமாக்கள் திரையிடுவதும், தமிழ் சேனல்கள்ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அவற்றை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும்.
எந்த ஜோசியரும் சொல்லி நான் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் செல்லவில்லை. நெடுநாட்களாகவே அங்கு செல்ல வேண்டும்என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நேரமே கிடைக்கவில்லை. இன்று சனிக்கிழமை பகவானுக்கு உகந்த நாள் என்பதால்அவரை வணங்க வந்துள்ளேன்.
மேலும் மழை வேண்டியும் அமைதி வேண்டியும் அவரிடம் பிரார்த்திப்பேன்.
நாகப்பாவை மீட்க எங்கள் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்தமிழக முதல்வரைச் சந்தித்து உதவி கோருவர். ராஜ்குமார் கடத்தலின்போது காட்டுக்குச் செல்ல பல தூதுவர்கள் தயாராகஇருந்தனர். ஆனால், இப்போது யாரும் காட்டுக்குள் செல்ல தயாராக இல்லை என்றார் கிருஷ்ணா.
பின்னர் அவர் கார் மூலம் திருநள்ளாரில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
காவிரியில் நீர் தராமல் அரசியல் செய்த கிருஷ்ணாவுக்கு காரைக்கால் அருகே கறுப்புக் கொடி காட்ட அதிமுக, மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்பினர் கருப்புக் கொடிகளுடன் குவிந்தனர். ஆனால், கிருஷ்ணா அங்கு வரும்முன்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டனர்.
இதையடுத்து கிருஷ்ணா திருநள்ளாரில் உச்ச காலப் பூஜையில் பங்கேற்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார்.