மைக் ஆப்: சட்டசபையில் எஸ்.ஆர்.பி. பட்டபாடு
சென்னை:
தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ்உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையேதமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இப்பிரச்சனையைக் கிளப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஜெயக்குமார், தலித்துகளின்முன்னேற்றத்திற்காக மத்திய அரசு நிதியை ஒதுக்கியது. ஆனால் தமிழக ஆதி திராவிடர் நலத்துறையோ அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தாமல் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில்போட்டு வைத்துள்ளது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிதியும் இப்போது ஆதி திராவிடர்களுக்குத்ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியிலும் வித்தியாசம் உள்ளது என்றார்.
நிதியமைச்சர் பொன்னையன்(குறுக்கிட்டு): இப்போது பட்ஜெட் பற்றி பேசக் கூடாது. ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கை மட்டும் பற்றி பேசுங்கள்.
எடுத்த எடுப்பிலேயே நிதியமைச்சர் குறுக்கிட்டதால் எரிச்சலடைந்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர்எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் எழுந்து பேசியதாவது: காங்கிரஸ் உறுப்பினர் பேச எழுந்தஉடனேயே நிதியமைச்சர் தலையிட்டு அவரைப் பேச விடாமல் தடுப்பது ஏன் என்றார்.
முதல்வர் ஜெயலலிதா: முதலில் உங்கள் கட்சி உறுப்பினரை கட்டுப்படுத்துங்கள். காங்கிரசால்மரபுகளை மீறுகின்றனர்.
எம்.எல்.ஏ. ஜெயக்குமார்: நாங்கள் ஒன்றும் மரபுகளை மீறும் கட்சியல்ல.
ஆதி திராவிடர் துறை அமைச்சர் கருப்பசாமி: ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைமாநில அரசு முறையாகவே பயன்படுத்தியுள்ளது. அதை வங்கியில் எல்லாம் போடவில்லை என்றார்.
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்: ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால்,அமைச்சர்தான் அவைக்குத் தவறான தகவல்களை அளித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய மைக்கை ஆப் செய்யப்பட்டது.இதனால் பாலசுப்பிரமணியம் பேசுவதை யாரும் கேட்க முடியவில்லை.
இந்தப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் மீண்டும் எழுந்து பாலசுப்பிரமணியம் பேசமுயற்சித்தபோதெல்லாம் அவரைப் பேச விடாமல் மைக்கை ஆப் செய்து கொண்டே இருந்தனர்.
இதனால் கடுப்பாகிப் போன எஸ்.ஆர்.பி., ஒலிபரப்பு அறையில் உட்கார்ந்து கொண்டு உளவுத் துறைபோலீசார்தான் வேண்டுமென்றே மைக் தொடர்பைத் துண்டித்து வருகின்றனர் என்றார்.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் நோக்கி திட்டிக் கொண்டனர்.
கடும் சத்தத்தால் அவையில் பெரும் அமளி நிலவியது.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கை நீட்டி ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டனர். சுமார் 10நிமிடங்கள் வரை சபையில் அமளி நீடித்தது.
அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் எழுந்து, எஸ்.ஆர்.பி.தேவையற்ற குற்றச்சாட்டுக்களை தமிழக அரசு மீது சுமத்தி வருகிறார். அவர் நிதானம் இழந்துபேசுகிறார். உளவுத் துறையினர் யாரும் ஒலிபரப்பு அறையில் இல்லை. வரம்பு மீறி எஸ்.ஆர்.பி.பேசக் கூடாது என்றார்.
எஸ்.ஆர்.பி: நான் நிதானம் இழந்து பேசுகிறேனா? (மைக் ஆப் ஆகிவிட்டது.. ஆனாலும் அவர்தொடர்ந்து பேசினார்).
நிதியமைச்சர் பொன்னையன்: எப்போதும் சபாநாயகர் பேசும்போது, மற்ற உறுப்பினர்களின்மைக் தானாகத் துண்டிக்கப்பட்டு விடும். இப்போதும் அவ்வாறுதான் நடந்துள்ளது. இதனால் மைக்துண்டிக்கப்பட்டதற்கு போலீசார் காரணமல்ல.
சபாநயகர் காளிமுத்து: நான் பேசும்போது யார் மைக்கும் செயல்படாது. அபாண்டமாக பேசாதீர்கள்.
எஸ்.ஆர்.பி: என்ன சட்டசபை இது. நான் ஒரு பிரண்ட் பெஞ்ச் உறுப்பினர். என்னை இப்படித்தான் அவமதிப்பதா? எதிர்க் கட்சிஎம்.எல்.ஏக்கள் வாயே திறக்கக் கூடாது என்று வேண்டுமென்றே ஆளுங்கட்சியினர் தடுத்து வருகிறார்கள். எனவே இனியும்இங்கு பேசிப் பிரயோஜனம் இல்லை, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறிவிட்டு வெளியே நடந்தார்.
அவரைத் தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
அவர் போன பின்னரும் அதிமுகவினர் விடாமல் பேசினர்.
பொன்னையன்: இந்த எஸ்.ஆர்.பி. சர்வாதிகாரத்தனமாக நடக்கிறார். எல்லோரையும் மிரட்டுகிறார்.
காளிமுத்து: காலையிலேயே அவர் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.
-->