திமுக ஊழல்: வள்ளுவர் சிலையில் ரூ.1.25 கோடி மோசடி
சென்னை:
திமுக ஆட்சியில் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதில் ரூ.1.25 கோடி முறைகேடுநடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் (தலைமை ஆடிட்டர் ஜெனரல்) அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தின் அருகே கடலுக்குள் உள்ள பாறையின் மீது திருவள்ளுவரின் 133அடி உயர பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு திமுக ஆட்சியில் இதற்கானபணிகள் தொடங்கப்பட்டு, பின்னர் 2001ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சிலை திறக்கப்பட்டது.
இந்த சிலையை அமைக்க ரூ. 3.60 கோடி செலவாகும் என இதனை அமைக்க நியமிக்கப்பட்ட கணபதி ஸ்தபதிஅறிக்கை தந்தார். இதையடுத்து இந்தத் தொகையை தவணை முறையில் ரிலீஸ் செய்ய திமுக ஆட்சியில் முடிவுசெய்யப்பட்டது. பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், 1995ம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி சிலை நிறுவும் பணிகளை நிறுத்தினார்.
பின்னர் 1996ம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1997ம் ஆண்டு மீண்டும் சிலை அமைக்கும் பணியைதிமுக அரசு ஆரம்பித்தது. அப்போது சிலை அமைக்க முதலில் திட்டமிட்டதைவிட அதிகம் செலவாகும் எனநிபுணர் குழு கூறியது. இதையடுத்து இந்தப் பணிக்கான செலவுத் திட்டம் மாற்றப்பட்டு நிதியின் அளவு ரூ.6.14கோடியாக உயர்த்தப்பட்டது.
இவ்வாறு அதிகமாக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.1,25,90,000 அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என மத்தியதணிக்கை அதிகாரியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ரூ.1.25,90,000 பணத்துக்கு திட்ட மதிப்பீட்டில் உரிய காரணங்கள் இல்லை என்றும் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அப்போதே தமிழக அரசுக்கு அறிக்கைஅனுப்பியுள்ளார்.
இருந்தாலும் அதை அப்போதைய திமுக அரசு நிராகரித்து விட்டு திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகஆடிட்டர் ஜெனரல் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த சிலை அமைக்கும் திட்டத்துக்கு மொத்தம் ரூ.8.99 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6.10 கோடிபணம் சிலையை வடித்த சிற்பியிடம் நேரடியாகவும், ரூ.2.88 கோடி தமிழ்நாடு அரசின் கட்டுமானக் கழகத்திடமும்வழங்கப்பட்டுள்ளது.
சிற்பியிடம் கொடுக்கப்பட்ட பணம் குறித்து உரிய கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கு முன்புகொடுக்கப்பட்ட ரூ.63.40 லட்சம் பணத்திற்குரிய கணக்கையும் சிற்பி அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்றுஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்த விவகாரங்கள் நடந்துள்ளதால் இதை ஜெயலலிதா பெரும்பிரச்சனையாக்க முடிவு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முழு விவரங்களையும் சேகரிக்க உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதாமற்றும் பொதுப் பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகமது அலி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. டீமும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது.