பெண்கள் போராடினாலும் மேலும் 3,000 மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு
சென்னை:
அரசு மதுக் கடைகளை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே திறக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் மிக பரபரப்பாக நடந்து வருவதால் சென்னையில் மேலும் 100 கடைகளைத் திறக்கவும், பஞ்சாயத்துகளில் 3,000 கடைகளைத் திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மீனவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் குடிநீர்த் தொட்டி, காய்கறிக் கடை, பலசரக்குக்கடை ஆகியவற்றிற்கு அருகே மதுக்கடை வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களைக் கட்டுப்படுத்த வந்த போலீசாரிடம் ஆவேசமாகப் பேசிய பெண்கள், முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகே மதுக் கடையை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். பெண்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்தக் கடை இன்றும் திறக்கப்படவில்லை.
இதேபோல, கோவை உக்கடம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக் கடை திறக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடைகளை இடம் மாற்ற அரசு ஒப்புதல்:
பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருவதால் சர்ச்சைக்குரிய இடங்களில் உள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு முன் வந்துள்ளது. இது குறித்து மதுக் கடைகள் நடத்தும் அரசின் டாஸ்மார்க் நிறுவன நிர்வாக இயக்குனர் சோ.அய்யர் கூறுகையில்,
குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்பட உண்மையிலேயே ஆட்சேபணைக்குரிய இடத்தில் கடைகள் இருந்தால் அவை இடம் மாற்றப்படும். ஆனால், மூடப்படும் தனியார் மதுக்கடைக்காரர்களின் தூண்டுதலால் தான் பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன என்றார்.
துடைப்பத்துடன் பா.ம.க. மகளிர் போராட்டம்:
இதற்கிடையே அரசு மதுக் கடைகளை எதிர்த்து பாமக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில், தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் விளக்குமாறுகளுடன் கலந்து கொண்டனர்.
பஞ்சாயத்துக்களில் 3,000 மதுக் கடைகள்:
இதற்கிடையே தமிழகத்தில், கிராம மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் 3,000 மதுக் கடைகளை திறக்க தமிழக அரசு டிவு செய்துள்ளது.
விறுவிறுப்பாக விற்பனையாவதால் அதை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரப்பும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த மதுக் கடைகள் நடத்தப்படும்.
தனியார் கடைகளுக்கு சரக்கு இல்லை:
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அனுமதிப்படி இயங்கி வரும் 879 தனியார் மதுபானக் கடைகளுக்கும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சரிவர சரக்கை வினியோகிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தனியார் மது பான விற்பனையை ரத்து செய்துள்ள தமிழக அரசு மாநிலம் முழுவதிலும் மதுக் கடைகளைத் திறந்துள்ளது. இருப்பினும் 879 தனியார் மதுபானக் கடைகள் மட்டும் மறு உத்தரவு வரும் வரை இயங்கலாம் என்றும் அவற்றிற்கு டாஸ்மாக் நிறுவனம் வழக்கம் போல சரக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனம் நடந்து கொள்ளவில்லை. சரக்குகளை சரியாக தங்களுக்கு வினியோகிக்கவில்லை என்று கூறி தனியார் மதுபான உரிமையாளர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இதற்கிடையே 879 தனியார் மதுக் கடைகளை தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.