15 தொகுதிகளில் திமுக போட்டி?
சென்னை:
மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதில் காங்கிரசுக்கு 10 இடங்களும், பா.ம.கவுக்கு 6 இடங்களும், மதிமுகவுக்கு 4 இடங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 3சீட்களும், பா.சிதம்பரத்துக்கு ஒரு இடம், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஓரிடத்தை வழங்கிவிட்டு, 15 இடங்களில் திமுகபோட்டியிட விரும்புகிறது.
முன்னதாக மதிமுகவுக்கு 5, முஸ்லீம் கட்சிகளுக்கு இரண்டு சீட்கள், கம்யூனிஸ்டுகளுக்கு மொத்தம் 4 இடங்கள் தருவது என்றுதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முடிந்தவரை தன்னிடம் அதிக எம்.பிக்கள் இருப்பதே நல்லது என திமுக கருதுகிறது.
இதனால் இந்திய தேசிய லீக், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு பலமுள்ள தொகுதிகளில் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது.அங்கு இஸ்லாமிய வேட்பாளர்களை திமுக களமிறக்கும் என்று தெரிகிறது. இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒரு இடத்தையும்,மதிமுகவுக்கு தர இருந்த 5ல் ஒன்றில் குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இம் முறை திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்:
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, அரக்கோணம், திருப்பத்தூர், திருச்செங்கோடு, பொள்ளாச்சி, கரூர், திருச்சி,பெரம்பலூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்.
விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக்கு வந்தால் கடலூர் தொகுதி வழங்கப்படும் என்றும், இல்லையென்றால் அத் தொகுதியிலும்திமுக போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரி, சிதம்பரம், வந்தவாசி, திண்டுக்கல், நீலகிரி, பழனி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை,நாகர்கோவில், தென்காசி ஆகிய 10 இடங்களும், ப.சிதம்பரத்துக்கு சிவகங்கை தொகுதியும் வழங்க திமுக முடிவு செய்துள்ளது.
பா.ம.கவுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம், ராசிபுரம், சேலம், வேலூர், தர்மபுரி ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். இதில்,திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியை போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மதிமுகவுக்கு சிவகாசி, கிருஷ்ணகிரி, கோபிச்செட்டிபாளையம், பெரியகுளம் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் தொகுதியும்ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒரே தொகுதியைக் கேட்டு சில கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதால் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கோவை தொகுதியில்போட்டியிட மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதேபோல் தஞ்சை தொகுதிக்கு திமுக - மதிமுக, திண்டிவனம் தொகுதிக்கு காங்கிரஸ் - மதிமுக - பா.ம.க., கரூர் தொகுதிக்குகாங்கிரஸ் - திமுக, பாண்டிச்சேரி தொகுதிக்கு காங்கிரஸ் - பா.ம.க., வட சென்னைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - திமுக, திருச்சிதொகுதிக்கு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு இடத்தைப் பெற இந்திய கம்யூனிஸ்ட் மறுத்தால் திமுக தனது இடங்களில் ஒன்றை அக் கட்சிக்குத் தரலாம் என்று தெரிகிறது.