வைகோ மீதான பொடா வழக்கு திடீர் வாபஸ்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சிப் பிரமுகர்கள் 8 பேர் மீது தொடர்ந்த பொடாவழக்கினை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது தமிழக அரசு பொடாசட்டத்தின்கீழ் கைது செய்தது. 2002ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னைவிமான நிலையத்தில் வந்திறஙகிய வைகோ கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து மதிமுக நிர்வாகிகளான சேலத்தைச் சேர்ந்த பூமிநாதன், வீர இளங்கோவன், திருச்சியைச்சேர்ந்த அழகு சுந்தரம், மணியன், மதுரை கணேசன், நாகராஜன், மதுரையைச் சேர்ந்த கணேச மூர்த்தி,செவந்தியப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் வேலூரில் சிறைவாசத்துக்குப் பின், மக்களவைத் தேர்தலின்போது, பிப்ரவரி மாதம் 7ம்தேதி ஜாமீனில் வெளியே வந்தார். வைகோவுக்கு முன்னதாகவே மதிமுக நிர்வாகிகள் 8 பேரும் ஜாமீனில் வெளியேவந்தனர்.
இந் நிலையில் பொடா வழக்குகளை மறுபரிசீலனை செய்ய நியமிக்கப்பட்ட பொடா மறுஆய்வுக் குழு, வைகோமீது பொடா சட்டத்தின் கீழ் முகாந்திரம் இல்லை என கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதியன்று தீர்ப்பு கூறியது. மாநிலஅரசுக்கு உத்தரவிட பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்றத்தில்தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இதைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஆய்வுக் குழுவின் உத்தரவுக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும் எனஏப்ரல் 29ம் தேதி உத்தரவிட்டது. ஆனாலும் வைகோ மீதான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறாமல் இருந்துவந்தது.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் பொடா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைவரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிபதிராஜேந்திரனிடம் அரசு வழக்கறிஞர் தெரிவிப்பார்.
வைகோ பேட்டி:
இப்போது விருதுநகர் மாவட்டம் கல்லக்குடி அருகே நடை பயணத்தில் இருக்கும் வைகோவிடம் தமிழக அரசின்இந்த முடிவு குறித்துக் கருத்துக் கேட்டபோது,
எனக்கு அரசின் மனு குறித்த முழு விவரம் இன்னும் கையில் கிடைக்கவில்லை. நீதிக்கும் நேர்மைக்கும்கிடைத்துள்ள இறுதி வெற்றி இது. பேச்சுரிமைக்காக நான் நடத்திய ஜனநாயகப் போராட்டத்தில்வென்றிருக்கிறோம். பொடாவையே ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் அதற்கானஅறிவிப்பு வெளிவர இருக்கிறது.
இந்த நிலையிலும் வழக்கை வாபஸ் பெறாவிட்டால், தனக்கு மூக்குடைப்பு ஏற்படும் என்பதால் முதல்வர்ஜெயலலிதா இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
எப்படியோ, இறுதியில் நீதி வென்றிருக்கிறது. எனது கைதே தவறு என்பதைச் சுட்டிக்காட்டி ஒரு மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறேன். அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால்தன்னைக் காத்துக் கொள்ள ஜெயலலிதா இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
கடந்த 19 மாதங்களாக நானும் என் கழகத்தின் 8 நிர்வாகிகளும் பெரும் தொல்லைப்படுத்தப்பட்டோம். கைதாகிசிறையில் இருந்த காலத்தில் 4 நிர்வாகிகளின் வீடுகளில் சாவுகள் நேர்ந்தன. அந்தச் சாவுகளுக்கு ஜெயலலிதா தான்பொறுப்பு என்றார் வைகோ.
கடந்த 2002ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் புலிகளுக்குஆதரவாகப் பேசியதற்காகத் தான் வைகோ கைது செய்யப்பட்டார். தனது நடை பயணத்தில் இன்று மாலை அதேதிருமங்கலம் வரும் வைகோ பொதுக் கூட்டத்திலும் பேசிவிட்டு அங்கேயே தங்கவுள்ளார்.
இந்த தினத்திலேயே அவர் மீதான வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முதல் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து வரும் முதல்வர்ஜெயலலிதா தனக்கு மூத்த அதிகாரிகள் தந்த ஆலோசனைகளை வைத்து, வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறும்முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications