ஜாமீன் மனு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை:
சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீது இன்று மூன்றாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதையடுத்து இந்தமனு மீதான தீர்ப்பு தேதி ஏதும் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மனு மீது எப்போது வேண்டுமானாலும் தீர்ப்புவெளியாகலாம்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சங்கராச்சாரியார் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியும், போலீஸ்தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசியும் ஆஜராகி வாதாடினர்.
நேற்றே போலீசாரின் தரப்பில் சங்கராச்சாரியாருக்கு எதிராக மேலும் பல ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
ஜெயேந்திரருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டபோது விதிமீறல் எதிலும் போலீஸ் ஈடுபடவில்லை. கைது நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ எடுத்துள்ளோம்.
சங்கரராமனை கெட்டவன் என்று கோபத்துடன் திட்டியதுடன் ஆத்திரத்துடன் அவர் நடந்து கொண்டார். கைது செய்யப் போனபோலீசார் கையைக் கட்டிக் கொண்டு மிக மரியாதையாக, சுவாமிகளே என்று தான் அவரிடம் பேசினோம்.
அவரைக் கைது செய்தபோது, இப்படி சிக்குவதற்குப் பதிலாக பேசாமல் தப்பிச்சுப் போயிருக்கலாம் என தெலுங்கு மொழியில் தன்அருகில் இருந்தவரிடம் சுவாமிகள் கூறினார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் நேபாளத்துக்கு தப்புவதற்காக புனேவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் ஹைதாராபாத் விமானநிலையத்தில் அவருக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரை ஆந்திராவைச் சேர்ந்த ஒருதொழிலபதிபர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
நேபாளம் செல்ல மத்திய விமான ஆணையத்திடம் அனுமதி வாங்கி அந்த ஹெலிகாப்டர் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மேலும்கைது நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோவைப் போட்டுக் காட்டவும் தயாராக உள்ளோம் என்று கூடுதல் எஸ்.பியின்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இன்று இந்த மனு நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீசாரின் இந்த மனுவை எதிர்த்துதீவிரமாக வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.