நம்ப முடியுதா?: வாசன்- இளங்கோவன்- ப.சி கூட்டணி!!
சென்னை:
என்றும் இல்லாத அதிசயமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கியக் கோஷ்டிகளின் தலைவர்கள் கை கோர்த்து செயல்படஆரம்பித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது எதிர்ப்பாளரான மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், வாசனின் எதிர்கோஷ்டித் தலைவர் மத்தியஅமைச்சர் இளங்கோவன் ஆகிய மூவரும் தான் அவர்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சி என்றால் அடிதடியுடன் கூடிய கோஷ்டிகளின் கூடாரம் என்று சின்னக் குழந்தையும் சொல்லும். சத்யமூர்த்தி பவன்காவலாளி தவிர, இந்தக் கட்சியில் கிட்டத்தட்ட அனைவருமே தலைவர்கள்தான்.
வாசன் கோஷ்டி, வாசனின் சித்தப்பா கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, குமரி அனந்தன் கோஷ்டி, அவரது தம்பிவசந்தகுமார் கோஷ்டி, ப.சிதம்பரம் கோஷ்டி, ஜெயந்தி நடராஜன் கோஷ்டி, அன்பரசு கோஷ்டி என பல வகை கோஷ்டிகள் உண்டு.
சதாமும் புஷ்சும் போல..
இந்த கோஷ்டித் தலைவர்களின் செயல்பாடுகள் படு வித்தியாசமானவை. எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர் தலைவராக வந்தாலும்,உடனடியாக மற்ற கோஷ்டித் தலைவர்கள் எல்லாம் இணைந்து செயல்பட்டு தலைவர் பதவியிலிருந்து அவரை அகற்றும் முயற்சியைத்தொடங்குவார்கள்.
காமராஜர் காலத்திற்குப் பிறகு விஸ்வரூபமெடுத்த இந்த கோஷ்டிப் பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லை, வரவும் வராது என்றேதோன்றுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு அதிசய நிகழ்வு தமிழக காங்கிரஸ் கட்சியில் நடந்து கொண்டுள்ளது.
சதாம் உசேனும் ஜார்ஜ் புஷ்ஷுமாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், ஜி.கே.வாசனும் சேர்ந்து செயல்பட முன் வந்திருக்கிறார்கள்.அதை விட ஆச்சரியமாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவர்களுடன் கை கோர்க்கிறார்.
நம்பவே முடியவில்லை அல்லவா? ஆனால் ரிப்ளியின் டைரி மாதிரி.. நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆரம்பித்து வைத்த இளங்கோவன்:
சமீபத்தில் டெல்லியில் கட்சித் தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம்நடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இங்கிருந்துதான் இளங்கோவன்-வாசன் கூட்டணி தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும். இதன் மூலம் வென்றவர், தோற்றவர் என்ற இரட்டை நிலை ஏற்படும். அதுதான் கட்சிக்கும்நல்லது.
தேர்தல் நடத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் தலைவரை தேர்ந்தெடுத்தால் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலுக்கு முடிவே ஏற்படாத அவலநிலை தொடரும். தேர்தல் நடத்தினால் இரண்டு கோஷ்டிகளுடன் கட்சி பலப்படும்.
2 பலம் பொருந்திய கோஷ்டிகள் இருந்தால்தான் கட்சியின் வளர்ச்சிக்கும் நல்லது. இதன் மூலம் பல தலைவர்களின் தேவையில்லாதஇடைஞ்சல்கள் ஒழியும் என்றாராம்.
இளங்கோவனை ஆதரித்த வாசன்:
இதை எதிர்த்து வாசன் பேசுவார் என்று மற்ற குட்டித் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில்,இளங்கோவனின் பேச்சை அப்படியே வழிமொழிந்துள்ளார் வாசன்.
இளங்கோவன் சொல்வதுதான் சரி என்று அவர் கூற தங்கபாலு, அன்பரசு, வசந்தகுமார் உள்ளிட்ட குட்டித் தலைவர்கள் பேயறைந்தது போலகாணப்பட்டனராம். தேர்தல் வைக்கப்பட்டால், வாசன் அல்லது இளங்கோவன்தான் வெல்வர். மற்றவர்கள் அடிபட்டுப் போய் விடுவர் என்றகவலைதான் அவர்களுக்கு.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட அனைவரும், தேர்தல் நடத்தக் கூடாது, அப்படிச் செய்தால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றுதங்களது தரப்பு வாதங்களைக் கூறினராம். இளங்கோவன், வாசன் சொல்வது நியாயமல்ல என்றும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இருவரையும் ஆதரித்த ப.சி:
இந் நிலையில்தான் ப.சிதம்பரம் தலையிட்டு, வாசன், இளங்கோவன் சொல்வது சரியானதுதான். ஆனாலும் கட்சியின் அடிமட்டஅளவிலிருந்துதான் தேர்தலைத் தொடங்க வேண்டும். தலைவர் பதவிக்கு மட்டும் தேர்தல் என்பது சரியான நடைமுறையாக இருக்காது.அடி மட்ட அளவிலிருந்து தேர்தலை ஆரம்பித்தால்தான் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என்றாராம்.
இளங்கோவன், வாசன், ப.சிதம்பரம் ஆகியோர் ஒரே குரலில் பேசியது மேலிடத் தலைவர்களுக்கே பெரிய ஆச்சரியமாகப் போய்விட்டதாம்.
கூட்டாக பேட்டி:
இந்தப் புதிய சூழ்நிலையில் சிதம்பரம், வாசன், இளங்கோவன் ஆகி. மூன்று தலைவர்களும் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்ஒன்றாகச் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மூன்று தலைவர்களும், தங்களுக்கிடையே இருந்த வேற்றுமைகளை மறந்து விட்டதாகவும், கட்சியைப் பலப்படுத்துவதற்காக 3பேரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினர்.
ப.சிதம்பரம் பேசுகையில், பிரச்சினையின் அடிப்படையிலேயே நான் கட்சியை விட்டு விலகினேன். ஆனால் அந்தப் பிரச்சினைதீர்க்கப்பட்டு விட்டதால் மீண்டும் காங்கிரஸில் இணைந்து விட்டேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகுவதும் மீண்டும் ஒன்று சேர்வதும்காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளில் நிகழக்கூடியதுதான்.
ஜெயேந்திரர் விவகாரம்:
ஜெயேந்திரர் கைது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற பிரதமர்மன்மோகன் சிங்கின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக விசுவ இந்து பரிஷத் கூறுவது அர்த்தமற்றது.
நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்தது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தி மாநிலத்தில் முதன்மையானகட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். அதன் மூலம் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான். மாற்றுக் கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல என்றார்.
இந்தப் பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் உடனிருந்தனர்.
முதன்முறையாக...
கடந்த 2001ம் ஆண்டு தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பின்னர் ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கே வராமல்இருந்து வந்தார்.
சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆன அவர் சில வாரங்களுக்குமுன்புதான் தாய்க் கட்சியில் மீண்டும் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு இன்றுதான் வந்தார்.
அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, இளங்கோவனும் இன்றுதான் சத்தியமூர்த்தி பவனுக்குவந்தார்.
இந்த ஒற்றுமை எத்தனை நாளே? ஸாரி.. எத்தனை மணி நேரமோ...