நாளை ஹைதராபாத்தில் நரசிம்ம ராவ் இறுதி சடங்கு
டெல்லி & சென்னை:
நாளை நடைபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் இறுதிச் சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நேற்று மதியம் ராவ் இறந்தார். அவரது மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 7 நாட்கள் துக்கம்அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து ராவின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்குகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மன்மோகன் சிங், சோனியா காந்தி, முன்னாள்பிரதமர்கள் வாஜ்பாய், சந்திரசேகர்,
பாஜக தலைவர் அத்வானி, திமுக சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சார்பில் அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள்அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல்,ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அங்கிருந்தனர்.
நரசிம்ம ராவின் உடல் அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு அரசு மரியாதையுடன் தகனம்செய்யப்படுகிறது. இந் நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழக தலைவர்கள் அஞ்சலி:
மறைவுக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராவ் மறைவு குறித்து பர்னாலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பன்முகம் கொண்ட மனிதராக ராவ் விளங்கினார். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்த நரசிம்மராவ் எளிமையான மனிதர்.ஏழ்மை, வறுமையை ஒழிக்க பாடுபட்டவர். நாட்டை மிகச் சிறந்த முறையில் அவர் வழி நடத்திச் சென்றார். அவரது மறைவு நாட்டுக்குபேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட திறமையான ஒரு தலைவரை நாடுஇழந்துள்ளது. அவரது சேவை நாட்டுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர் மரணமடைந்துள்ளது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.