தஞ்சையில் பிரமாண்டமான திமுக மாநாடு தொடங்கியது
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று திமுகவின் மண்டல மாநாடு தொடங்கியது.
தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் மேலவஸ்தா சாவடி என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான திடலில் இம்மாநாடு நாகூர் ஹனீபா இசைக் கச்சேரியுடன் தொடங்கியது.
பல நூறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்மாநாட்டுக்கு திடல் உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் என பெயர்சூட்டப்பட்டுள்ள இத் திடலில் பந்தல் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1,25,000 பேர் அமரும் வகையில் மாபெரும் பந்தல்அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடலின் வெளியில் பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு இணையாக ஸ்டாலினுக்கும் கட்-அவுட்டுகள்வைக்கப்பட்டுள்ளன. மேடையிலும் ஸ்டாலினின் படம் வரையப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காக கூடவே பேராசிரியர் அன்பழகனின்கட்அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுப் பந்தலில் இரண்டு முகப்புத் தோற்றங்கள் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முகப்புத் தோற்றம்அரண்மனை போன்றும், மற்றொரு முகப்புத் தோற்றம் கிரேக்க நாட்டு அரண்மனை போன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
பந்தலின் உட்புறம் முழுவதும் பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டிருந்த 82 அடி உயர கொடிக்கம்பத்தில் கவிஞர் நிர்மலா சுரேஷ் இன்று காலை கொடியேற்றிவைத்தார். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மேள தாளம், கரகாட்டம், தப்பாட்டத்துடன்வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் 10.30 மணியளவில் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து 10.45மணியளவில் மாநாட்டை திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்துப் பேசினார்.
பின்னர் துரைமுருகன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் பழனி மாணிக்கம், ரகுபதி, ஏ.கே.எஸ்.விஜயன்எம்.பி., பூண்டி கலைச்செல்வன், பெரியண்ணன் அரசு ஆகியோர் மாநாட்டு தலைவரை வழிமொழிந்து பேசினார்கள். தொடர்ந்துதுரைமுருகன் தலைமை உரையாற்றினார்.
மாலை 4 மணிக்கு தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுச்செயலாளர் அன்பழகன் இரவு நிறைவுரையாற்றுகிறார்.
2வது நாளான நாளை துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறார்கள். பின்னர் மாலை 5மணிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நல்லகண்ணு,வரதராஜன், ஆர்.எம்.வீரப்பன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி பிரமாண்ட மேடையும், வரவேற்புவளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் திமுக சார்பில் அலங்கார வளைவுகளும், தோரணங்களும்அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய முதல் நாள் மாநாட்டில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பந்தலுக்கு வெளியேயும் தொண்டர்கள் திரண்டு நின்றுதலைவர்களின் பேச்சை மிகவும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.