கீரிப்பட்டி விவகாரம்: ஐ.நா. சபையை அணுக முடிவு!
சென்னை & ஈரோடு:
கீரிப்பட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்தப்பட முடியாத சூழ்நிலை நிலவி வருவது தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையில் புகார் கொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அதன் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறுகையில்,
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய கிராமங்களில் ஜாதீய வெறி பிடித்த சக்திகள்தேர்தலை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றன. கடந்த 9 வருடங்களாக இங்கு தலைவர் பதவிகள் காலியாகவே உள்ளது.
ஆதிக்க ஜாதியினரே, பொம்மை போல ஒருவரை தேர்தலில் நிறுத்தி அவர் வெற்றி பெற்றவுடன், ராஜினாமா செய்ய வைக்கும்அவலம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசும் போலீசாரும் தயாராக இல்லை. மத்திய அரசும் இதைகண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
ஊர் மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட பொம்மை வேட்பாளருக்கு ஓட்டுப் போடாத காரணத்தால் கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15தலித் குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வேலை தர மாட்டார்கள், கடையில் பொருள் தரமாட்டார்களாம்.
இதனால் இந்த 15 தலித் குடும்பத்தினருக்கு தேவையான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு தனியார மளிகைக் கடை, டீக் கடையை அரசே நடத்த வேண்டும்.
தலித் மக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி, அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஜாதி வெறியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுப்பதற்குப் பதில் அடக்குமுறையாளர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவது மிகக் கேவலமானது என்றார்திருமாவளவன்.
முன்னதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக, இந்திய தேசிய லீக், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தேசிய காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் திருமாவளவன்இப்பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் பிரச்சனையைசர்வதேச அரங்குக்குக் கொண்டு செல்வது என்று முடிவாகியுள்ளது.
நல்லகண்ணு உண்ணாவிரதம்:
இதற்கிடையே கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களுக்கு முறையாக தேர்தல் நடத்தக் கோரி மதுரையில்வரும் 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், கீரிப்பட்டி,பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களுக்கு தலைவர் பதவி நீண்டகாலமாகவே காலியாக உள்ளது.
இதன்மூலம் அந்தக் கிராமங்களில் பஞ்சாயத்து முறை அடியோடு செயலிழந்து கிடக்கிறது.
அங்குள்ள மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசாங்கம் தனது கடமையை பாரபட்சிமின்றிஆற்ற வேண்டும் என்று கோரியும், வரும் 19ம் தேதி மதுரையில், ஆர்.நல்லகண்ணு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறும் என்றார் பாண்டியன்.