சேது சமுத்திரத் திட்டம்: மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்
மதுரை:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சேது சமுத்திரத் திட்டத்சை மதுரையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை 5.35 மணியளவில்தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சோனியா காந்தி, கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
300 மீட்டர் அகலம், 12 மீட்டர்ஆழம் கொண்டதாக சேது கால்வாய் அமையும். இதன் மூலம் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, சென்னையிலிருந்து ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வர வேண்டும் என்றால்இலங்கையைச் சுற்றித் தான் தூத்துக்குடிக்கு வர முடியும்.
இதற்காக 769 கடல் மைல் தொலைவை அது கடக்க வேண்டும். சேது கால்வாய் அமைவதன் மூலம் இந்த தொலைவு 345 கடல்மைல் தொலைவாக குறையும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா மதுரை பாண்டி கோவில்அருகே உள்ள மஸ்தான்பட்டியில் இன்று மாலை 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆளுனர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழா தொடங்கியதும் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இந்திய கப்பல்போக்குவரத்துத் துறை செயலாளர் ஜோஸப் அனைவரையும் வரவேற்றார்.
விழா மலரை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட, அதை சோனியா காந்தி பெற்றுக் கொண்டார். பின் 5.35 மணியளவில்பிரதமர் மன்மோகன் சிங் பட்டனை அழுத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பிறகு அவர் பேசினார்.
விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,தயாநிதி மாறன், அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்கா பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பிற்பகல் 3.20 மணியளவில்டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தனர். அவர்களை ஆளுனர் பர்னாலா, கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, மணிசங்கர அய்யர், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தமிழக அமைச்சர்கள்ஓ. பன்னீர்செல்வம், ஜெயக்குமார் மற்றும் தலைவர்கள் வரவேற்றனர்.
தொடக்க விழா நடந்த அதே சமயத்தில், கோடியக்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் கடலை ஆழப்படுத்தும்பணிகளும் தொடங்கின. இதை நேரடியாக விழா மேடையில் பெரிய திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது.
தொடக்க விழாவையொட்டி டிஜிபி அலெக்சாண்டர் தலைமையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.