ஜார்ஜ் கோட்டையில் ரகசிய அறை கண்டுபிடிப்பு!
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தின்உள்பகுதியில் ரகசிய அறை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
200 ஆண்டு கால பழமையான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தான் தமிழக அரசின் தலைமைச் செயலகம், சட்டசபை,பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
கோட்டையின் உள்புறம் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்தப்பணியை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணியின்போது 3 நாட்களுக்கு முன்பு,யூனிபார்ம் கேலரி என்ற அறையின் கீழே ஒரு ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
10க்கு 8 என்ற அளவில் இந்த அறை அமைந்துள்ளது. வெள்ளையர் ஆட்சியின்போது இயங்கி வந்த மெட்ராஸ் வங்கியின்பணம் மற்றும் நகை போன்றவை இந்த அறைக்குள் தான் வைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த வங்கி பின்னர் பாம்பே மற்றும் பெங்கால் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு இம்பீரியல் வங்கி என்று அழைக்கப்பட்டது.அதன் பின்னர் பாரத ஸ்டேட் வங்கியாக (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) மாறியது.
கடந்த 1795 ம் ஆண்டிலிருந்து இந்த ரகசிய அறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முதலில், இந்த அறையை ஐஸ் கட்டிகள்வைக்கும் அறையாகத் தான் இருக்கும் என ஆய்வாளர்கள் எண்ணினர்.
ஆனால் இந்த அறை மிகவும் ரகசியமான நுழைவாயிலைக் கொண்டிருந்ததால், வங்கிப் பணத்தை வைக்கும் ரகசியப்பெட்டமாகவே இருந்ததாக தற்போது முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த அறையை சிமென்ட் பூச்சு இல்லாமலேயே அந்தக் காலத்தில் கட்டியிருக்கிறார்கள். அறையின் மேற்கூரை, மரக் கூழ்,சுண்ணாம்புக் கலவை, சிறு செங்கற்கள் ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரகசிய அறை அமைந்துள்ள அறையின் மேல் பகுதியில் ஏராளமான, கனமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நல்லவேளையாக ரகசிய அறையை கண்டுபிடித்து விட்டார்கள். இல்லாவிட்டால் பாரம் தாங்காமல் ஒரு நாள் இந்த ரகசிய அறையின்மேற் கூரை உடைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கோட்டை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களை இந்த ரகசிய அறையும் இனி கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications