ஜெயேந்திரருக்கு எதிராக ரவிசுப்ரமணியம் பரபரபரப்பு வாக்குமூலம்
சென்னை:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை 50 லட்சம் ரூபாய் செலவானாலும் பரவாயில்லை, தீர்த்துக்கட்டி விடுங்கள் என்று ஜெயேந்திரர் கூறியதாக இந்த வழக்கில் அப்ரூவரான ரவிசுப்ரமணியம் சென்னை நீதிமன்றத்தில்வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கைப் போலவே, மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும்ரவிசுப்ரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரி முன்னிலையில் ரவி சுப்ரமணியம் வியாழக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.அப்போது சங்கரராமன் கொலை வழக்கு குறித்தும் அவர் வாக்குமூலம் அளித்தார்.
ரவி சுப்ரமணியத்தின் வாக்குமூலம்: நானாக விரும்பித் தான் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அப்ரூவர் ஆனேன்.
பில்டர் தொழிலில் ஈடுபட்டு வந்த நான், லீலா என்பவர் மூலம் தான் ஜெயேந்திரருக்கு அறிமுகமானேன். இரவு நேரங்களில்லீலாவுடன், ஜெயேந்திரர் தொலைபேசியில் அடிக்கடி பேசுவார். அதேபோல நேரில் சந்திக்கும் போதும் இருவரும் மட்டும் தனிஅறையில் இருப்பார்கள்.
நான் வெளியே இருந்து கொள்வேன். கடந்த 1995ம் ஆண்டு ஜெயேந்திரர் தாம்பரம் கல்யாண மண்டபத்தில் தங்கியிருந்தார்.அப்போது எனது நண்பர் விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மற்றும் நானும் சென்று பார்த்தோம்.
சரஸ்வதியுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜெயேந்திரர் கேட்டார். நாங்கள் வெளியே நின்றிருந்தோம். சிறிது நேரத்தில்சரஸ்வதி பதட்டமாக வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டார். என்னவென்று கேட்டபோது பெரியவர் தன்னிடம் தவறாகநடக்க முயன்றதாக பதட்டத்துடன் கூறினார்.
பின்னர் ஜெயேந்திரர் தொலைபேசியில் என்னுடன் பேசி, சரஸ்வதியிடம் தவறாக நடந்து விட்டேன். அவரிடம் மன்னிப்புகேட்டதாக கூறு என்று கேட்டுக் கொண்டார். ஆனால் விஸ்வநாதன் குடும்பத்தினரும் இதை பெரிதுபடுத்தவில்லை. அதன் பிறகுஜெயேந்திரருடன் நான் நல்ல நெருக்கமாகி விட்டேன்.
கட்டட ஒப்பந்த வேலைகளை என்னிடம் தான் கொடுப்பார்கள். பெரியவருக்கும், பெண்களுக்கும் தொடர்பு உண்டு. நிறையப்பெண்கள் பெரியவருடன் தனியாக இருப்பதைப் பார்த்துள்ளேன்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் நிதி இயக்குனராக உள்ளவரின்மனைவி பிரேமா, சங்கரா பள்ளிக்கூட முதல்வர் ரேவதி, கேன்டீன் நிர்வாகி பத்மா உள்ளிட்ட பல பெரிய பெரியபெண்மணிகள் எல்லாம் பெரியவருக்கு தனிப்பட்ட முறையில் பழக்கம்.
இந் நிலையில் 2004ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அப்பு, கதிரவன் மற்றும் நான் ஆகியோர் சங்கர மடம் சென்று பெரியவரைச்சந்தித்தோம். அப்போது சங்கரராமன் புகைப்படத்தை அப்பு, கதிரவனிடம் காட்டினார் பெரியவர்.
இனிமேல் இவன் கடிதமே எழுதக் கூடாது. 50 லட்சம் செலவானாலும் பரவாயில்லை, தீர்த்துக் கட்டி விடுங்கள் என்று கோபமாககூறினார் ஜெயேந்திரர். எனக்கு மட்டும் இவனால் (சங்கரராமனால்) பிரச்சினையில்லை, விஜயேந்திரரையும்தொல்லைப்படுத்துகிறான் என்றார் ஜெயேந்திரர்.
பின்னர் விஜயேந்திரரைப் போய்ப் பார்த்தோம். அங்கு ரகுவும் உடன் இருந்தார். அப்போது இதற்கு (சங்கரராமனைத் தீர்த்துக்கட்டுவதற்கு) ஆகும் செலவுக்கு பணம் ஏற்பாடு செய்யுமாறு ரகுவிடம் விஜயேந்திரர் கூறினார். பின்னர் நாங்கள் சென்னைதிரும்பி விட்டோம்.
பின்னர் செப்டம்பர் 3ம் தேதி சங்கரராமன் தீர்த்துக் கட்டப்பட்டார். அன்றைய தினம் சென்னை சோழா ஹோட்டலில் வைத்துஅப்புவிடம் ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தேன். பின்னர் அப்பு என்னை கோடம்பாக்கம் அழைத்து வந்தார். அங்கு வைத்துவிமான டிக்கெட், ரூ. 10,000 பணம் கொடுத்து என்னை மும்பை செல்லுமாறு கூறி அனுப்பினார்.
தொலைந்தான் எதிரி:
நானும் மும்பை சென்று விட்டேன். அதன் பின்னர் மறுநாள் சென்னைக்கு வந்தேன். ஆனால் வீட்டுக்குப் போகவில்லை.விஸ்வநாதன் வீட்டுக்குப் போன் செய்து பிள்ளையார்பட்டிக்குப் போகலாமா என்று கேட்டேன். அவரும் சரி என்றார்.
இதையடுத்து நான், விஸ்வநாதன், சரஸ்வதி ஆகியோர் பிள்ளையார்பட்டி போனோம். திருச்சியில் சாமி கும்பிட்ட பிறகுபெரியவருக்கு போன் செய்து பேசினேன். அதன் பின்னர் அடுத்த நாள் கிருஷ்ண ஜெயந்தியன்று பெரியவரைப் போய்ச்சந்தித்தேன்.
அப்போது ஒரு ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்து இதில் ரூ. 5லட்சம் உள்ளது. கதிரவனிடம் கொடுத்து விடு என்றார். எனது எதிரிதொலைந்தான், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அப்போது என்னிடம் கூறினார்.
அதன் பின்னர் அடிசன் ஹோட்டலில் வைத்து என்னை சந்தித்தார் கதிரவன். பெரியவரிடம் ரூ. 20 லட்சம் வாங்கி வா, போலிக்குற்றவாளிகளை சரணடைய வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். நானும் பெரியவரிடம் கேட்டேன். அதற்கு சுந்தரேசஅய்யர், ரூ. 20 லட்சம் பணம் கொடுத்து ஒரு ரசீதையும் கொடுத்து அதில் அப்புவிடம் கையெழுத்து வாங்கி வருமாறு கூறினார்.
அதன்படியே நானும் செய்தேன். அதன் பின்னர் போலி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதைத் தொடர்ந்துகதிரவன் போலீஸில் சிக்கிக் கொண்டார்.
இதைக் கேள்விப்பட்டதும் பெரியவரும், சின்னவரும் ஹைதராபாத் சென்று விட்டார்கள். நானும் தலைமறைவானேன். என்னைகுருவாயூரில் வைத்து போலீஸார் பிடித்தனர் என்று தனது வாக்குலத்தில் கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
சுமார் 2 மணி நேரம் ரவிசுப்ரமணியம் வாக்குமூலம் கொடுத்தார். அவரை அடுத்த விசாரணையின் போது குறுக்கு விசாரணைசெய்வதாக ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் தினகர் கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கை வருகிற 22ம் தேதிக்கு நீதிபதி உமாமகேஸ்வரி ஒத்திவைத்தார்.