நடுக்கடலில் தத்தளித்த 10 இலங்கை அகதிகள்: கடற்படை மீட்டது
ராமேஸ்வரம்:
ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு நடுக் கடலில் உள்ள தீவில் இறக்கி விடப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த 12 இலங்கை தமிழ்அகதிகளை கடற்படையினர் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் உஷாந்தன் என்பவர் தங்கியிருந்தார். இவரது சகோதரிஇலங்கையில் இருந்தார். இலங்கையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாலும், அங்குபதற்றமான நிலை நிலவுவதாலும், தனது சகோதரியையும் மேலும் சில குடும்பத்தினரையும் தமிழகத்திற்கே அழைத்து வர முடிவுசெய்தார் உஷாந்தன்.அவரும், மேலும் 5 பெண்கள் உள்ளிட்ட 11 அகதிகளும் சேர்ந்து இதற்காக ராமேஸ்வரம் வந்தனர். அங்குள்ள ஏஜென்டுகள்சிலரிடம் தலா ரூ. 3,000 கொடுத்து கள்ளப் படகுகள் மூலம் தங்களை இலங்கையில் இறக்கி விட்டு விடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஏஜென்டுகளும் பணத்தை வாங்கிக் கொண்டு 18ம் தேதி இரவு 7 மணியளவில் 12 பேரையும் படகில் ஏற்றிக் கொண்டுகடலுக்குள் சென்றனர். நள்ளிரவைத் தாண்டியதும் படகை ஒரு தீவில் கொண்டு வந்து நிறுத்தி இதுதான் இலங்கை என்று கூறி 12பேரையும் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
ஆனால் தாங்கள் இறங்கியது இலங்கை அல்ல, நடுக் கடலில் உள்ள தீவு என்பது சிறிது நேரத்திலேயே அகதிகளுக்குத் தெரிந்துவிட்டது. இதையடுத்து ஏதாவது படகு வந்தால் அதில் ஏறி மீண்டும் ராமேஸ்வரமே சென்று விடலாம் என அவர்கள்காத்திருந்தனர்.
ஆனால் ஒரு படகும் வரவில்லை. இந் நிலையில் அந்தக் குழுவில் இருந்த 5 பெண்கள் பசியில் மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து பிரபாகரன் மற்றும் உஷாந்தன் ஆகிய இருவரும் தனுஷ்கோடிக்கு நீந்தி சென்று கடற்படையினர் உதவியை நாடலாம்என முடிவு செய்து நீந்தத் தொடங்கினர்.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இருவரும் தனுஷ்கோடி வந்து சேர்ந்தனர். அங்குள்ள கடற்படையினரிடம் விஷயத்தைக்கூறினர். இதையடுத்து பிரபாகரனை மட்டும் அழைத்துக் கொண்டு கடற்படையினர் மற்றும் போலீஸார் தீவுக்கு சென்றனர்.
ஆனால் அதற்குள் அப்பகுதியில் ரோந்து சென்ற ஒரு கடற்படை படகு அவர்களை மீட்டு மண்டபத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டது தெரியவந்தது. 12 பேரும் தற்போது மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.