ஜனவரியில் புதுக் கட்சி: கார்த்திக்
மதுரை:
திருநெல்வேலியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநாட்டின் போது புதியஅரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக நடிகர் கார்த்திக் முதல் முறையாகஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சினிமாவில் நேரம் சரியில்லை என்றாலோ அல்லது வாய்ப்புகள் குறையத் தொடங்கி விட்டாலோ, டக்கெனஅரசியலுக்கு மாறி விடுவது திரைத் துறையினரின் வாடிக்கையான ஒரு விஷயம் தான்.
எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, ராமராஜன் என பலர் இதற்கு உதாரணமாக காட்டலாம். இருப்பினும் சரத்குமார்,டி.ராஜேந்தர் போன்ற ஒரு சிலர் விதி விலக்காகவும் அமைந்துள்ளனர்.
சமீப ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக ஏகப்பட்ட பில்டப் கள் கொடுக்கப்பட்டு வந்தன.ஆனால் நான் வாய்ஸ் மட்டும்தான் கொடுப்பேன் என்று டகாய்ச்சி வாங்கி எல்லோரையும் அப்செட் ஆக்கினார்ரஜினி. இந்த நிலையில் விஜயகாந்த் திடீரென அரசியல் களத்தில் குதித்தார். நான் கண்டிப்பா வருவேன் என்று கூறிவந்த விஜயகாந்த் சொன்னபடியே மதுரையில் மாநாட்டை நடத்தி கட்சியையும் ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் இன்னொரு நடிகரும் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். அவர் நடிகர் கார்த்திக். சமீபஆண்டுகளாக கார்த்திக் அதிக படங்களில் நடிக்கவில்லை. காரணம் அவரிடமிருந்த சில தேவையில்லாத கெட்டபழக்கங்களால் வந்த வாய்ப்புகளை வீணடித்து நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டார்.
நல்ல நடிகரான அவரால் படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ள முடியாமல் போய், பட வாய்ப்புகள் மங்கிப்போய் விட்டன. இதையடுத்து பொருளாதார ரீதியாகவும் சிக்கல்களை சந்தித்து வந்த கார்த்திக், அதிமுகவில் சேரவிரும்பி தலைமைக் கழகம் வரை போய் விண்ணப்பம் கொடுத்தார். ஆனால் அம்மா கண்டுகொள்ளவில்லை.
பொறுமை காத்த கார்த்திக் திடீரென சரணாலயம் என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கி அனைவரையும்ஆச்சரியப்படுத்தினார். இது சமூக சேவை அமைப்பு மட்டுமே அரசியல் அமைப்பு அல்ல என்று கார்த்திக் கூறிவந்தாலும், அவர் நிச்சயம் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் கூறி வந்தனர்.
கார்த்திக் மதுரையில் நடத்திய மாநாட்டிற்குக் கூடிய கூட்டம் அரசியல் கட்சியினரையே மிரள வைத்தது. ஆனால்அந்த மாநாட்டின் போது ரசிகர்களால் ஏற்பட்ட ரகளையால் பாதியிலேயே கூட்டம் முடிந்தது.
இந்த நிலையில் ஒரு வழியாக புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது குறித்து வாய் திறந்துள்ளார் கார்த்திக்.மதுரையில் இது குறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருநெல்வேலியில், எனது ரசிகர்மன்ற மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டின் போது எனது புதிய அரசியல் கட்சி குறித்துஅறிவிக்கவுள்ளேன்.
சமீபத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ரசிகர் மன்ற கூட்டங்கள், சரணாலய அமைப்பின்கூட்டங்களுக்கு சென்ற போது என் மீதும், எனது தந்தையின் மீதும் ரசிகர்களும், பொதுமக்களும் வைத்திருக்கும்அன்பைப் புரிந்து கொண்டேன். இதையடுத்தே அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது.
அரசியல் கட்சி தொடங்கினாலும் கூட சரணாலயம் அமைப்பு தொடர்ந்து இயங்கும். தேவைப்பட்டோருக்கும்,நலிவடைந்தோருக்கும் சரணாலயம் அமைப்பு தொடர்ந்து உதவிகள் செய்து வரும்.
நவம்பர் 27ம் தேதி தேனியில் சரணாலயம் அமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கவுள்ளோம். தேனி கூட்டத்தின்போது எனது அரசியல் பிரவேசம் குறித்து விளக்கமாகபேசவுள்ளேன். இருப்பினும் நெல்லை மாநாட்டில்தான் எனது கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்துஅதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன்.
மதுரை மாநாட்டின் போது ரசிகர்கள் கட்டுங்கடங்காத அளவுக்கு போனதற்கு காரணம், சரியான போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்படாத காரணத்தால் தான். நெல்லையில் அது நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார்கார்த்திக்.
சரணாலயம் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை மதுரையில் இன்று கார்த்திக் கூட்டியுள்ளார். அப்போதுஅரசியல் பிரவேசம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து 30ம் தேதி நடைபெறவுள்ளமுத்துராமலிங்கத் தேவர் குருபூஜையிலும் கார்த்திக் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தவுள்ளார்.