பஹ்ரைன்-உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்குதமிழக அரசு ரூ2 லட்சம்-உடல்கள் நாளை வருகை
சென்னை:
பஹ்ரைன் தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம்நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந் நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று அல்லதுநாளை விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன.பஹ்ரைன் தலைநகர் மனாமாவில், உதாம்பியா என்ற இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தகட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த 3 மாடிக் கட்டடத்தின் 3வது மாடியில்,நேற்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 16 தமிழர்கள்பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் அனைவரும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள். இறந்தவர்கள் விவரம் முழுமையாகத் தெரிய வந்துள்ளது.
அவர்களது உடல்கள் நாளை கல்ப் ஏர் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. அதன் பின்னர் அனைவரின் உடல்களும் அவரவர் ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லபபடுகின்றன.
இறந்தவர்கள் விவரம்:
தேவேந்திர செட்டியாரின் மகன் ராஜா (வயது 22),
மருதமுத்துவின் மகன் பாலுச்சாமி (27),
முருகேச உடையாரின் மகன் ராஜவேலு ( 35).
மூன்றுபேரும் கடலூர் மாவட்டம் சேதுவராயன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
மற்றவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது விவரம்:
செங்கமலம் மகன் செந்தில் (21), குமரேசன் மகன் கண்ணதாசன் (24), பூமாலை (30),சிவா, சின்னதுரை, முத்துவேல், சிவப்பிரகாசம், பாலைமுத்து, முத்தையன், குமார்,ராஜரத்தினம், சங்கர், பாலசுப்ரமணியன்.
சம்பவம் நடந்த இடத்தை பஹ்ரைன் நாட்டுப் பிரதமர் ஷேக் பாலிபா பின் சல்மா அல்காலிபா, இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று பஹ்ரைன் பிரதமர் வருத்தம்தெரிவித்தார்.
இந்தியத் தூதர் ஷெட்டி கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் மிகவும் குறுகிய,சரியான காற்றோட்டம் இல்லாத அறைகளில் இந்தியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த இடம் சரியில்லை என்று கடந்த ஜனவரி மாதமே இந்த நிறுவனத்திற்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதை மீறிஅவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில்முக்கால்வாசிப் பேர் குறுகிய அறை என்பதால் தப்பி வர முடியாமலும், மூச்சுத்திணறியும் தான் இறந்துள்ளனர் என்றார் ஷெட்டி.
நிவாரண உதவி கிடைக்காது?:
இதற்கிடையே, இறந்தவர்கள் மற்றும் உயிர் தப்பிய தொழிலாளர்கள் அனைவரும்தலா ரூ.1.5 லட்சம் வரை ஏஜென்டுகளிடம் பணம் கொடுத்துத்தான் இங்கு வேலைக்குவந்துள்ளனர்.
அவர்களுக்குப் பேசியபடி இங்கு சம்பளம் தரப்படவில்லை என்று தெரிகிறது. மேலும்இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக அழைத்து வரப்பட்டதாகவும்கூறப்படுகிறது.
எனவே இதுபோன்ற விபத்துக்களில் இறப்போருக்கு வழக்கமாக தரப்படும்இழப்பீட்டுத் தொகை இவர்களுக்குக் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இருப்பினும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பஹ்ரைன் பேசி இறந்தவர்களின்குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை பெற்றுத் தர முயற்சிகள்மேற்கொள்ளப்படும் என பஹ்ரைன் பிரதமர், இந்தியத் தூதரிடம் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக இந்த தீ விபத்தில் 17 பேர் இறந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், பலியானது 16 பேர் தான் என்றுதெரியவந்துள்ளது.
தமிழக அரசு ரூ. 2 லட்சம் உதவி:
இந் நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேச தீக்ஷிதருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்பஹ்ரைன் தீ விபத்தில் இறந்த 16 தமிழர்களுக்கும் இரங்கல் தெரிவிதது தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், வளைகுடா பகுதியில், பஹ்ரைன் நாட்டில் ஏராளமானஇந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அங்கு ராயல் டவர் என்ற நிறுவனத்தின் கட்டுமானப் பணியில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள்பணியாற்றி வருகிறார்கள்.
குடாபியா என்ற இடத்தில் உள்ள தொழிலாளர் முகாமில் உள்ள 3 மாடி கட்டடத்தில், இந்தியர்கள் தங்கியிருந்த இடத்தில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் 16 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை தமிழகத்திற்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைமேற்கொண்டுள்ளது.
கட்டிட தொழிலாளர்களாகச் சென்று கொடிய தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகளின்குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அரசின் சார்பில் நிதியுதவி செய்யப்படும் என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
பிரதமருக்கு வைகோ கோரிக்கை:
இதற்கிடையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்,
பஹ்ரைனில் நடைபெற்றுள்ள துயரச் சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 16 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும், இறந்து போனவர்களின் உடல்களைத் தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்க்கவும்,அவர்களைப் பணிக்கு அமர்த்திய நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கவும் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.