கட்சியை உடைக்க எல்ஜி தீவிரம்
டெல்லி - சென்னை:மத்திய அமைச்சர் பதவியைக் கேட்ட என்னை அதை வாங்கித் தராமல் விட்டதோடு, கட்சியினர் மத்தியில்என்னைக் குறித்து அவமரியாதையாக பேசி முதுகில் குத்தி விட்டார் வைகோ என்று வைகோவுக்கு எதிராகபோர்க்கொடி உயர்த்தியுள்ள மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆவேசமாக கூறியுள்ளார்.
மதிமுகவில் முதல் முறையாக பெரிய அளவில் பூசல் வெடித்துள்ளது. வைகோவுக்கு எதிராக எல்.கணேசன்,முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலகுவார்களா அல்லது நீக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று எல்.கணேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுமத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருமாறு தான் கேட்டும் அதை வாங்கித் தராமல் அவமதித்து விட்டார் வைகோஎன்று கூறினார் கணேசன்.
கணேசன் கூறுகையில், நான் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஏதும் இல்லை. அதுஒரு பாவச் செயலும் இல்லை. இதுகுறித்து வைகோவிடம் கேட்டபோது, உங்களை மந்திரியாக்கி எனது நன்றிக்கடனை தீர்த்துக் கொள்வேன் என்றார்.
ஆனால் என்னிடம் இப்படிப் பேசி விட்டு கட்சியின் பிற தலைவர்களிடம் போய், இவரை மந்திரி ஆக்கினால்கட்சியை ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விடுவார் என்று கூறியுள்ளார்.
எனது முதுகில் குத்தி விட்டார் வைகோ. யூ டூ புரூட்டஸ் என்று வைகோவை கேட்பதை விட வேறு வார்த்தைஎனக்குத் தெரியவில்லை. இந்தக் கட்சிக்காக எத்தனை பழிச் சொற்களை, துயரங்களை, சுமைகளை நான்தாங்கியிருப்பேன்?
வைகோவுடன் இணைந்து மதிமுக ஆரம்பித்து கடந்த 13 ஆண்டுகளாக நான் இணைந்து பணியாற்றி வருகிறேன்.என்னையும், பிற நிர்வாகிகளையும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் வைகோ ஆலோசனை கேட்பதில்லை.
திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி அமைத்தபோதும், பின்னர் திமுக மற்றும் அதிமுகவுடன் வெவ்வேறுதேர்தல்களில் கூட்டணி அமைத்தபோதும், வைகோவுடன் இணைந்து செயல்பட்டு வந்தேன்.
மாறி மாறிக் கூட்டணி வைத்ததால், எனது மனதில் பட்டதை டெல்லி தொலைக்காட்சி பேட்டியின்போதுதெரிவித்தேன். இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.
வைகோ மதிமுகவின் பொதுச் செயலாளர். எல்லோரையும் விட மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். அவரைமையமாக வைத்து நாங்கள் எல்லோரும் செயல்பட்டு வருகிறோம். ஆகவே வைகோ குறித்து நான் வெளியிட்டகருத்துக்கள், அவருடன் மோதுவதாக அர்த்தம் இல்லை. தலைமைக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை.
கட்சியின் அனைத்து மட்டத்திலும் இப்போது குழப்பம் நிலவுகிறது. எனக்குள்ளும் அந்தக் குழப்பம் இருக்கிறது.வைகோவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் அவர் மீதானநம்பகத்தன்மை குறைந்து வருகிறது.
மதிமுக தனது இறுதிக் காலத்தை எட்டியுள்ளது. இந்த நிலைமை தொண்டர்களின் மனதில் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வு என்னிடமும் இருப்பதில் என்ன தவறு?
இப்போது வரை நான் மதிமுகவில்தான் நீடிக்கிறேன். நாளை என்ன நடக்கும், நாளை மறுநாள் என்ன நடக்கும்என்பது குறித்து எனக்குத் தெரியாது. 40 ஆண்டு காலம் என்னுடன் பணியாற்றியவர்களுடன் ஆலோசித்து ஓரிருநாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.
வைகோவும், நானும் 1962ம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறோம். செஞ்சி ராமச்சந்திரன்என்னுடன் 1963ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார். செஞ்சியாரைப் போல மேலும் பலர் 40 ஆண்டுகாலமாக என்னுடன் பணியாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பேசி, ஆலோசித்து அடுத்த கட்ட முடிவுகுறித்து அறிவிப்பேன்.
நான் இவ்வாறு பேசி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவர்அப்படிச் செய்ய மாட்டார். ஒரு வேளை எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அதை ஜனநாயகப்பூர்வமாகசந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் கணேசன்.
நாளை முதல் ஆலோசனை:
இதற்கிடையே டெல்லி சென்றுள்ள எல்.கணேசன் இன்று மாலை சென்னை திரும்புகிறார். அதன் பின்னர் நாளை முதல் சென்னை, திருச்சி, தஞ்சையில்சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து எல்.கணேசன் கூறுகையில், இன்று மாலை நான் சென்னை வருகிறேன். வந்த பின்னர் நாளை காலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டசெயலாளர்கள், பொதுக்குழு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி முன்னோடிகளுடன் கலந்து பேசவுள்ளேன்.
இரவு சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி போகிறேன். மறு நாள் காலை பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட முன்னோடிகளுடன் கலந்துபேசுகிறேன். அன்று மாலை தஞ்சை போகிறேன். அங்கு தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் முன்னோடிகளுடன் கலந்து பேசவுள்ளேன்.
இந்த கலந்தாலோசனைக்குப் பிறகு சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம் என்றார் கணேசன்.
மதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடப்பதற்கு முன்பே எல்.கணேசன் தரப்பு தங்களது முடிவை அறிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோவுக்கு நோட்டீஸா?. மா.செக்கள் மறுப்பு:
இதற்கிடையே, கணக்கு காட்டக் கோரியும், பொதுக்குழுவைக் கூட்டக் கோரியும் வைகோவுக்கு நோட்டீஸ் எதையும் அனுப்பவில்லை என்றுமதிமுகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூறுகையில், வைகோவுக்கு மாவட்டச் செயலாளர்கள் யாரும் நோட்டீஸ்அனுப்பவில்லை. இது 100 சதவீதம் கற்பனையான தகவல்.
எனது வாழ்நாள் முடியும் வரை நான் வைகோவுடன்தான் இருப்பேன். எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும் விலை பேசப்பட்டு விட்டார்கள். எனவேஅவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்றார் கோபமாக.
வட சென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் இதுகுறித்துக் கூறுகையில், தற்போது நான் வைகோவுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். மொத்தம் உள்ள35 மாவட்டச் செயலாளர்களில் 25 பேர் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர். வைகோவுக்கு ஒரு மாவட்ட செயலாளர் கூட நோட்டீஸ் அனுப்பவில்லைஎன்பதுதான் உண்மை என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், எல்.கணேசன் கருத்துக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தருகிறார்கள் என்றால் தஞ்சை மாவட்ட (இது எல்.ஜியின்சொந்த மாவட்டம்) செயலாளர் துரை பாலகிருஷ்ணனைக் கேட்டால் தெளிவாகி விடும். அவர் கூட எல்.கணேசனுக்கு ஆதரவாக இல்லை என்பதுதான்நிதர்சனம்.
35 மாவட்ட செயலாளர்களும் வைகோ பக்கம்தான் உள்ளனர். எந்த முடிவையும் வைகோ தனிப்பட்ட முறையில் எடுத்ததில்லை. கட்சியின் பொதுக் குழு,அரசியல் ஆலோசனைக் குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவுகள் எடுப்பார் வைகோ.
திமுக செல்ல வேண்டும் என்று எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும் முடிவு செய்து விட்டார்கள் என்றால் அதை தெளிவாக சொல்லி விட வேண்டும்.திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் இருவரும் இப்படிப் பேசி வருகிறார்கள் என்றார் ஜீவன்.