ஷார்ஜாவில் கேரள வாலிபர் மாயம்
ஷார்ஜா:கேரளாவைச் சேர்ந்த நவீன் விஸ்வநாதன் என்ற இளைஞர் ஷார்ஜாவில் காணாமல் போய் விட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் நவீன் விஸ்வநாதன். 29 வயதாகும் இவருக்கு இரண்டு வயதில் மகள் உள்ளார். அபுதாபியில் வசித்து வரும் நவீன், அட்நாக் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
வியாழக்கிழமை இரவு தனது நண்பரை சந்திப்பதற்காக அவர் ஷார்ஜாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது நண்பரின் வீட்டில் தங்கிய அவர் அடுத்த நாள் காலை வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் குறித்த தகவல் ஏதும் இல்லை.
நவீன் எங்கே போனார், என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை என்று அவரது உறவினரான சுபாஷ் ரவீந்திரதாஸ் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நவீனின் மனைவி மற்றும் அவரது 2 வயது மகள் சில மாதங்களுக்கு முன்பு இங்குதான் தங்கியிருந்தனர். சில வாரங்களுக்கு முன்புதான் அவர்கள் இந்தியா திரும்பிச் சென்றனர்.
அவருக்கு கடன் தொல்லை எதுவும் இருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் நாட்டை விட்டு போய் விட்டாரா என்பதை அறிவதற்காக குடியேற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்தோம்.
அவரைத் தேடும் பணியில் அவரது நண்பர்களும், உறவினர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரது செல்போனும் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என்றார் அவர்.
இதுகுறித்து ஷார்ஜாவில் உள்ள அல் கார்ப் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தூதரகங்களில் குவியும் இந்தியர்கள்:
அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தினசரி 2000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உதவி கோரி வந்த வண்ணம் உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்த்து வரும் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்திய தூதரகங்களை அணுகி வருகின்றனர். அபுதாபி மற்றும் அரபு எமிரேட்ஸில் உள்ள பிற இந்தியத் தூதரகங்களுக்கு தினசரி சராசரியாக 2000 பேர் வருகிறார்களாம்.
உதவி நாடி வரும் இந்தியர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளை இந்தியத் தூதரகமே வழங்குகிறது.
முறையற்ற விசாக்கள் மூலம் வந்துள்ள இந்தியர்கள் அரபு எமிரேட்ஸில் தங்குவதை முறைப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியத் தூதரகங்களை நாடி வரும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூரகத்தின் முதல் நிலைச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் பாபு கூறுகையில், இதுவரை 2800 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளோம்.
அடைக்கலம் நாடி 2000 இந்தியர்கள் மனு செய்துள்ளனர். 1600 பேருக்கு அவசரகால சான்றிதழ்களை வழங்கியுள்ளோம். இதுதவிர 850 பேருக்கு அவுட் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 2000 பேரின் விண்ணப்பங்கள் கைரேகைப் பதிவுக்காக காத்துள்ளன.
திடீரென அதிக அளவிலான இந்தியர்கள் வருவதால் தூதரக அலுவலகம் முன்பு கூட்டம் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த போலீஸாரையும் அழைத்துள்ளோம் என்றார் பாபு.