கடற்கரை மணலில் 'கடலை'; காதல் ஜோடிகளை விரட்டிய காக்கிகள்!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து சல்லாப, சந்தோஷங்களில் மூழ்கி கடல் மணலில் கடலை போட்டுக் கொண்டிருந்த ஜோடிகளை, போலீஸார் எச்சரித்து விரட்டினர்.
மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவற்றில் சமீப காலமாக ஜோடி ஜோடியாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் அமைதியாக அமர்ந்து பேசாமல், வேறு சில சில்மிஷங்களில் பகிரங்கமாக ஈடுபடத் தொடங்கியதால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருவோர் முகம் சுளிக்கும் நிலை உருவானது.
மடியில் மாறி மாறி படுத்துக் கொள்வதும், சுற்றிலும் ஜனங்கள் இருக்கிறார்களே என்ற லஜ்ஜையே இல்லாமல் முத்தமிட்டுக் கொள்வதும், துப்பாட்டாவால் தங்களை மூடிக் கொண்டு உள்ளுக்குள் உராய்ந்து கொள்வதும், கட்டிப்பிடித்து விளையாடுவதும் என நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டியதை நாடே அறியும் வகையில் வெட்ட வெளிச்சமாக்கி வந்த ஜோடிகளால் கடற்கரை மணல்வெளி களேபரமாகிக் காணப்பட்டது.
இதற்கு முடிவு கட்ட காவல்துறை முடிவு செய்தது. இதையடுத்து கடற்கரைக்கு வரும் ஜோடிகள், உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது, மடியில் படுப்பது என சில்மிஷங்களில் ஈடுபடக் கூடாது என போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
நேற்று நேரடியாக போலீஸார் களத்தில் இறங்கினர். கடற்கரைக்குச் சென்ற போலீஸ் குழு, கடற்கரை மணலில் தாறுமாறாகக் கிடந்த காதல் ஜோடிகளைப் பிடித்து கடுமையாக எச்சரித்தது. பின்னர் அவர்களின் செல்போன் எண்கள், முகவரிகளை பெற்றுக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பலர் ஜோடி ஜோடியாக வந்து போலீஸாரிடம் சிக்கினர். சில ஜோடிகள் கள்ளக் காதல் ஜோடி எனத் தெரிய வந்தது. இதில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் 45 வயதுக்கார ஆணும், 15 வயது மாணவியும் சிக்கினர். அந்த மாணவியை கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிய போலீஸார், அந்த நபரை மட்டும் காவல் நிலையத்துக்குத் தள்ளிக் கொண்டு போனார்கள்.
காதல் ஜோடிகள் அனைவரையும் கூட்டி வைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பல்வேறு அறிவுரைகளைக் கொடுத்து, இனிமேல் இதுபோல நடந்தால் வீட்டுக்குத் தெரிவிப்போம், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
இனிமேல் கடற்கரையில் இதுபோல அடிக்கடி சோதனை நடத்தப்படும் எனவும், கடற்கரையில் கண்டபடி நடக்க இனிமேல் காதல் ஜோடிகளுக்கு அனுமதி இல்லை என்றும் போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.