முகம் மாறும் விடுதலைச் சிறுத்தைகள்!
மதுரை:
தலித் கட்சி என்ற நிலையிலிருந்து மாறி, பல தரப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கும் அரசியல் கட்சியாக உருவெடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் காவல்துறையில் பணியாற்றியவர் தொல்.திருமாவளவன். தடய அறிவியல் துறையில் பணியாற்றி வந்த தொல். திருமாவளவன் தனது பதவியை ஒரு நாள் துறந்தார். தலித் சமுதாயத்தினரின் உயர்வுக்காக பொது வாழ்க்கைக்கு மாறினார்.
உருவானது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு. நேரடி அரசியல் அமைப்பாக இல்லாமல், ஜாதி அமைப்பாக மட்டுமே அப்போது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு செயல்பட்டு வந்தது. தனது இயக்கத்தை திருமாவளவன் நேர்த்தியாக நடத்தி வந்ததைப் பார்த்து பெரும் பெரும் அரசியல் கட்சிகளும் கூட
ஆச்சரியப்பட்டன.
உரிமைகளைப் பெற வேண்டுமானால் தேர்தல்களில் நின்று சட்டசபைக்குச் செல்வதுதான் சரியான வழி என்பதால் அரசியல் இயக்கமாக தனது ஜாதி இயக்கத்தை மாற்றினார் திருமா.கடந்த தேர்தலுக்கு முந்தைய சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டார். மங்களூர்
தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆனார் திருமா. ஆனால் பின்னர் தனது பதவியைத் துறந்தார்.
தலித் மக்களின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பலம் வாய்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவரான தடா பெரியசாமி வெளியேறினார்.
இருந்தாலும் தொல். திருமா, தொய்வடையவில்லை. முன்பை விட அதிக வேகம் காட்டி கட்சிக்குப் பலம் கூட்டினார். இடையில் பல காலமாக விரோதியாக பார்க்கப்பட்ட பாமகவுடன் நட்பு மலர்ந்தது. டாக்டர் ராமதாஸுடன் இணைந்தார். தமிழ் பாதுகாப்பு இயக்கம் கண்டார். இருவரும் இணைந்து பணியாற்றியது திமுக, அதிமுகவுக்கு கலக்கத்தைக் கொடுத்தன.
கடந்த தேர்தலில் அதிமுக அணிக்கு மாறினார். 9 இடங்களைப் பெற்று போட்டியிட்டார். இம்முறை அவருக்குக் கிடைத்தது 2 தொகுதிகளில் வெற்றி.
இந் நிலையில், தலித் கட்சி என்ற வட்டத்தில் இருந்து வெளியேறி இது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சியாக விரிவாக்க திருமாளவளவன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தலித் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அந்தக் கட்சியால் தனித் தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிகிறது. மேலும், அரசியல் கட்சிகளும் தலித் கட்சிதானே என்று சில தொகுதிகளை மட்டுமே ஒதுக்குத் தருகிறார்கள்.
இந்த நிலையை மாற்றி அனைத்து ஜாதியினரும் இடம் பெற்றுள்ள கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாற்றினால் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் பரவலாக போட்டியிடலாம், கட்சியின் அந்தஸ்தும் மாறும் என்ற யோசனைக்கு திருமாவளவன் வந்துள்ளாராம்.
இதன் முதல் கட்டமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தனது கட்சியின் அமைப்புகளை முழுமையாகக் கலைத்தார் திருமாவளவன். விரைவில் பலதரப்பட்ட ஜாதியினரையும் கொண்ட புதிய நிர்வாகிகளை அவர் அறிவிக்கப் போவதாக கூறப்படுகிறது.
பிளவு வருமா?
ஆனால் திருமாவின் இந்த நடவடிக்கையை, அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இணைப் பொதுச் செயலாளர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
திருமா.வின் நடவடிக்கையால் தலித் மக்களின் உயர்வுக்காக பாடுபடும் கட்சி என்ற நிலையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் தடம் மாறி விடும். இதனால் தலித் மக்களிடைய நம் மீது உள்ள நேசமும், நம்பிக்கையும் தவிடுபொடியாகி விடும். எனவே வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்கிறாராம் அவர்.
இருப்பினும் செல்வத்தின் அவநம்பிக்கை தேவையற்றது. அனைத்து ஜாதிகளிலும் உள்ள இளைஞர் பட்டாளத்தை நம் பக்கம் திருப்ப இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும்.மேலும் ஒரு சில தனித் தொகுதிகளில் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் போட்டியிட்டுக் கொண்டிருப்பது.
பாமக முதலில் ஜாதிக் கட்சியாகத்தான் பார்க்கப்பட்டது. இன்று பல தரப்பட்ட ஜாதியினரையும் அரவணைக்கத் தொடங்கியுள்ளது. அதே பாதையில் நாமும் திரும்பினால்தான் தமிழகம் முழுவதும் பலம் உள்ள கட்சியாக மாற முடியும். அரசியல் சக்தியாக மாற முடியும் என்பது திருமாவின் வாதம்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பலம் வாய்ந்தவை என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது தேமுதிக வந்து விட்டது. பாமகவும் வலுவான சக்தியாக உள்ளது. இந்த இரு கட்சிகளும் எதிர்கால அரசியலில் பெரும் பங்காற்றப் போகின்றன. அந்த வரிசையிலும் நாமும் இடம் பெற வேண்டும். அதற்கு மாற்றம் மிக மிக அவசியம் என்கிறாராம்
திருமா.