'இலங்கை பாதுகாப்பு துறைக்கு ரூ. 92,000 கோடி'!
கிளிநொச்சி:
2008ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கென ரூ. 92,000 கோடிக்கு மேல் இலங்கை அரசு பணத்தை ஒதுக்கியுள்ளதாகவும், இந்த பணம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களைக் கொல்வதற்கே பயன்படும் என்றும் இலங்கை தமிழ் எம்.பி. அரியநேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு எம்.பி அரியநேந்திரன். இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
2008ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், பாதுகாப்புக்கென ரூ. 92,000 கோடிக்கு மேல் அரசு பணத்தை ஒதுக்கியுள்ளது. ஆனால் இத்தனை பணமும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களைக் கொல்வதற்கே.
வடக்கு, கிழக்கில் வசிக்கும் ஒரு தமிழரைக் கொல்ல தலைக்கு ரூ. 5,140 பணத்தை ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டைவிட பாதுகாப்புக்கென பெருந்தொகையான பணத்தை ஒதுக்கியிருப்பது அரசாங்கம் போரொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
60 வருடங்களுக்கும் மேலாக தமிழர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.
அதேபோலத்தான் தற்பொழுது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கென பெருந்தொகையை வரவு செலவுத் திட்டத்தின் பெயரில் ஒதுக்கியுள்ளது.
கிழக்கின் உதயம் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அங்கு சிங்கள மக்களை குடியேற்றுவதும், ராணுவ முகாம்களை அமைப்பதுமே நடந்து வருகிறது.
புத்த மடாதிபதிகள் தொப்பிக்கல மலைப் பகுதிக்குச் சென்று அங்கு புத்த கோவில் ஒன்றை அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் போடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்தால், அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது பற்றிச் சிந்திக்க முடியும்.
சமஷ்டி அடிப்படையில், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்துமாயின், அவர்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியும்.
ஆனால் சமஷ்டி தீர்வு யோசனையிலிருந்து பல்டி அடித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடுகிறது.
எந்தவொரு அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ அல்லது புதிய அரசாங்கத்தை உருவாக்கவோ நாங்கள் உதவி செய்யப் போவதில்லை.
எமது கட்சியின் கொள்கைகளுக்கு அமையவே செயல்படுவோம் என்று பேசியுள்ளார் அரியநேந்திரன்