ஸ்டாலின் மீது ஜெ. 'பயங்கர' புகார்!
சென்னை:
அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தால்தானே என்று முதல்வர் கருணாநிதியிடம், அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
அதிமுக 36வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதா வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பரபரப்பு புகாரை அவர் சுமத்தினார்.
ஜெயலலிதா பேசுகையில், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். மாணவர்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
நேற்று எனது வீட்டுக்குள் ஒரு நபர் நுழைந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. வந்த நபருக்கு என் வீட்டுக்குள் எந்த வழியாக வர வேண்டும் என்று எப்படித் தெரிந்தது. மாடிக்கு எப்படி வர வேண்டும் என எப்படி அவருக்குத் தெரிந்தது. அடுத்த அறைக்குள் எப்படிப் போக வேண்டும் என்று அவருக்கு எப்படித் தெரிந்தது.
நடந்தது மிகப் பெரிய தவறு. ஆனால் அதன் தீவிரத்தைக் குறைப்பதற்காக வந்த நபர் என்னிடம் வேலை கேட்கவே வந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.
சீரியஸ்னஸைக் குறைக்கவே, பிரச்சினையை திசை திருப்பவே இப்படிப் பொய் சொல்லியுள்ளனர்.
வேலை கேட்டு வருகிற நபர் வீட்டுக்குள் இப்படித்தான் வருவாரா, பூட்ஸ் காலோடுதான் வருவாரா. வெளியில் இருந்த காவல்துறையினர் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள். இதுதான் முக்கிய கேள்வி.
மாநில அரசு தவறு செய்துள்ளது, முதல்வர் தவறு செய்துள்ளார். எனக்குக் கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அவர்கள் தரவில்லை. நான் நேற்று உயிருடன் தப்பியது ஏதோ தெய்வாதீனமாக நடந்த செயல்.
இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்த செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.
எல்லா இடங்களிலும் எனது நலம் விரும்பிகள் இருக்கிறார்கள். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பலர், பல இடங்களில் உள்ளனர். அவர்கள் தெரிவித்த செய்தி இது.
சில நாட்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியதாக அந்தத் தகவல் கூறுகிறது. அப்போது கருணாநிதி சொன்னாராம், தமிழ்நாட்டில் அடுத்து தேர்தல் வரும்போது நான் இருப்பேனோ, இல்லையோ, நீ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள திமுக கூட்டணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்து விட்டால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டால், நீ பெரும் இன்னல்களையும், துயரங்களையும் சந்திக்க வேண்டும் என்றாராம்.
அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில் அடுத்த தேர்தல் வரும் வரை ஜெயலலிதா உயிரோடு இருந்தால்தானே என்றாராம். இப்படிப் பேசியதாக எனக்குத் தகவல்கள் வந்துள்ளன.
இதை வெளிப்படையாக சொல்ல வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு இதை சொல்ல வேண்டிய அவசியம் வந்துள்ளதாக கருதியதால் இப்போது கூறுகிறேன்.
நீதிமன்றத்தில் முறையிடுவேன்:
முன்னாள் முதல்வரான என் வீட்டின் வாயிலில் வெறும் 3 காவலர்கள் மட்டும் இருக்கிறார்கள். ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு 65 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தபப்பட்டுள்ளனர்.
ஆதலால் எனக்கு போதியளவு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்றார் ஜெயலலிதா.