இன்னும் உறுதியுடன் வீறு கொண்டு போராடுவோம் - பிரபாகரன்
கிளிநொச்சி: தமிழ்ச்செல்வனை இழந்த சோகம் பேரிழப்பாக இருந்தாலும், இன்னும் உறுதியுடன் முன்பை விட உக்கிரமாக வீறு கொண்டு எங்களது போராட்டத்தைத் தொடருவோம் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மரணம் விடுதலைப் புலிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தமிழ்ச்செல்வன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரபாகரன், தமிழ்ச்செல்வனை இழந்தாலும் முன்பை விட உக்கிரமாக போராடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிங்கள தேசத்திடமிருந்து அத்தகைய சமிக்ஞை எதையும் நாங்கள் இதுவரை காண முடியவில்லை.
புத்த மதம் போதித்த அன்பை சிங்கள தேசத்திடம் எங்களால் காண முடியவில்லை. சிங்கள தேசம் திறந்த மனதுடன் இல்லை. அமைதி செய்தியை அது போதிக்கவில்லை. அதற்கு மாறாக, போர் வெறி பிடித்த பருந்துகளை அனுப்பி தமிழ் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
எமது சமாதானப் புறாவை அது மிகக் கொடூரமாக கொன்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் அன்புடன் நேசிக்கப்பட்ட எமது அரசியல் தலைவரின் உயிரை அது பறித்துள்ளது. சர்வதேச சமுதாயம் மிகவும் மதித்த ஒரு தலைவரை அது கொன்றுள்ளது.
தமிழ் ஈழ மக்களின் இதயங்களில் இடம் பிடித்த அன்புத் தலைவரை அது கொன்று குவித்துள்ளது. எமது அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் மற்றும் ஐந்து புலிகள் இயக்கத் தளபதிகளின் இழப்பால் தமிழ் தேச மக்கள் ஆழ்ந்த துயரத்திலும், சோகத்திலும் மூழ்கிப் போயுள்ளனர்.
சுதந்திரப் போராட்டத்தை நாம் ஆரம்பித்தது முதல் என்னுடன் இணைந்து பணியாற்றியவர் தமிழ்ச்செல்வன். நான் அவரை மிகவும் ஆழமாக நேசித்தேன். எனது இளைய சகோதரனாக கருதி அனைத்தையும் சொல்லிக் கொடுத்தேன். அவரது அழகான அந்தப் புன்னகைக்குப் பின்னே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
அவரது தலைமைத்துவ பண்பு, திறமை அனைத்தையும் அறிந்து ஒரு மாபெரும் தளபதியாக, தன்னிகரற்ற அரசியல் தலைவராக, ஒரு தூதராக, திறமை வாய்ந்த பேச்சாளராக நான் அவரை உயர்த்தி உருவாக்கினேன்.
தமிழீழ சுதந்திரம் குறித்தே அவரது சிந்தனைகள் எப்போதும் இருக்கும். அவர் நேசித்த மக்களைப் பற்றியே எப்போதும் சிந்தனைகள் இருக்கும். சுதந்திரமான, கெளரவமான, பாதுகாப்பான வாழ்க்கை நமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது ஒரே சிந்தனையாக இருந்தது.
சுயநலமற்ற நெருப்பு அவர். லட்சியத்தை அடைய தீவிரமாக பணியாற்றியவர் தமிழ்ச்செல்வன்.
அவர் விட்டுச் சென்ற லட்சியத்தை, கடமையை நாம் இன்னும் உத்வேகத்துடன் மேற்கொண்டு தொடர்ந்து போராடுவோம். தமிழ்ச்செல்வனின் மறைவால் தொய்வடையாது, வீறு கொண்டு எழுந்து போராடுவோம். புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் முன்பை விட வேகமாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.
இதற்கிடையே, தமிழ்ச்செல்வனின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications