நெல்லை பூதப்பாண்டி வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம்?
நாகர்கோவில்: பூதப்பாண்டி வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் இல்லை என்று வனச்சரகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பூதப்பாண்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பை அடுத்த பெருங்குடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தேவதாசன் என்பவர் அதிகாலையில் ஒரு தோட்டத்திற்கு குளிக்க சென்றபோது புலி ஓடியதை பார்த்தாக சொன்னார்.
இதையடுத்து மேலும் பலர் அந்த பகுதியில் புலி நடமாடுவதை பார்த்தாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பூதப்பாண்டி வனச்சரகர் கோபாலதாஸ் தலைமையில் வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் புலிகள் எதுவும் தென்படவில்லை. மேலும் வனத்துறையினர் விசாரணையில் புலி கரும்சிவப்பு நிறத்தில் இருந்ததாக கூறினர். அதே நிறத்தில் அப்பகுதியில் ஒருவர் நாய் வளர்த்து வந்தது தெரியவந்தது.
மேலும் தேவதாசன் புலி ஓடியதாக கூறிய பகுதியில் உள்ள தால்தடத்தை வைத்து வனத்துறையினர் ஆய்வு செய்ததில் அது நாயின் காலடித்தடம் என்பது தெரியவந்தது. எனினும் பொது மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதால் வனத்துறையினர் தொடர்ந்து துப்பாக்கியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பூதப்பாண்டி வனசரகர் கோபால்தாஸ் கூறுகையில், பெருங்குடி வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம். புலிகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதன் அடிப்படையில் மணல் பகுதியில் பதிந்திருந்த காலடித்தடங்கலையும் ஆய்வு செய்தோம். ஆய்வில் அது நாயின் காலடிதடம் என்பது தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கன்றுக்குட்டி ஓன்றையும் புலி தூக்கி சென்றதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றோம். ஆனால் அதற்கான அடையாளம் ஏதுமில்லை. அப்பகுதியில் கோழிகளின் குடல் போன்றவற்றை வெளியில் போடுவதால் அதனை உண்ண நாய்கள் கூட்டமாக வருகின்றன.
அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மேலும் புலியை பார்த்ததாக வீண் வதந்தியை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.