வைகோவை அதிமுக கூட்டணிக்கு போக சொன்னேனா-வீரமணி
சென்னை: அதிமுக கூட்டணியில் சேருமாறு நான் தான் மதிமுகவை வலியுறுத்தினேன் என்று வைகோ தவறான தகவல்களைக் கூறி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்ச்செல்வன் மற்றும் 5 படைத் தளபதிகளை சிங்கள ராணுவம் குண்டு போட்டுக் கொன்றுள்ள கொடுமை கேட்டு உலகில் உள்ள மனித நேயர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தி இறுதி மரியாதை- வீரவணக்கம் செலுத்தும் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி தனது கண்ணீர் கவிதையால் இரங்கலைத் தெரிவித்தார்.
இதை மிகப்பெரிய தேசிய குற்றம் போல எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா கண்டன அறிக்கை விட்டதோடு, அதற்காக ஆட்சியையே கலைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தமிழ் இனமான உணர்வோடும், மனிதாபிமானத்தோடும் கருணாநிதி இரங்கல் விடுத்ததில் எவ்வகையில் தவறு எனக்கேட்டு இப்படிப்பட்ட தமிழின விரோதிகளோடு இன்னமும் அவரது கூட்டணி தொடர வேண்டுமா என்று வைகோ மீது கொண்ட திராவிட இயக்க பாச உணர்வு காரணமாகவும், உரிமை காரணமாகவும் நான் அறிக்கை விடுத்தேன்.
அதற்கு பதில் கூறி வைகோ விடுத்த அறிக்கையில் காங்கிரசோடு கூட்டணி சேர்ந்துள்ளார்களே என்பதற்காக திமுகவை வெளியே வரச் சொல்லுவீர்களா என்று திசை திருப்பும் வகையில் கேள்வி கேட்டுள்ளார்.
அவரை நான்தான் அதிமுக அணிக்குப் போகச் சொன்னதாகவும் ஒரு தவறான குற்றச்சாட்டையும் கூறியுள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் எத்தனை முறை மாறிமாறி குழப்பத்தோடு தடுமாறி, பிறகு அதிமுக அணிக்குச் சென்றார் என்பது நாடறிந்த செய்தி.
வைகோவை நோக்கி நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் செய்தி விடுத்தமைக்காக திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறாரே ஜெயலலிதா, அதற்கு அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் கருணாநிதி மீது வழக்கும் போடுவேன் என்கிறாரே.
அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்கள் நிலைப்பாடு என்ன?. அடிப்படைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களே- உங்கள் அடிப்படைக் கொள்கை தான் என்ன என்பதை விளக்குவீர்களா
ஈழத் தமிழர் பிரச்சினையிலோ, விடுதலைப் புலிகள் பிரச்சினையிலோ ஜெயலலிதா மாறுபட்டுக் கூட இருக்கலாம். கூட்டணி சேருகின்ற கட்சிகளிடையே கொள்கை மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் அவை தனித்தனிக் கட்சிகளாகவும் இயங்குகின்றன. கொள்கை மாறுபாடு என்பது வேறு, கொச்சைப்படுத்துவது என்பது வேறு. அதுவும் ஒரு மரணத்தை மையப்படுத்தி மனிதாபிமானமற்ற முறையில் இரக்கமற்று எழுதுவதை வைகோவால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் வெளியிட்டுள்ள அறிக்கை, சுமத்திய குற்றச்சாட்டு ஏதோ முதல்வர் கருணாநிதி மீது மட்டும் சுமத்தப்பட்டதல்ல-அது வைகோவுக்கும் பொருந்தும், வீரமணிக்கும் பொருந்தும், ஏன் உலகம் முழுமையும் உள்ள தமிழின உணர்வாளர்கள், மனிதாபிமானிகள் அனைவருக்குமே பொருந்தக்கூடியதாகும்.
பொடாவை எதிர்த்து நீங்கள் வெளியே வர வேண்டும் என்று கையெழுத்திட்டதோடு, ஜெயலலிதா உங்களை பொடாவில் கைது செய்தது தவறு என்று தொடக்கத்திலிருந்து எழுதி, பேசியவர்கள் என்ற உரிமையோடு உங்களைக் கேட்கிறோம். இதற்குப் பதில் அளிக்காவிட்டாலும், யோசியுங்கள். இது எம் உணர்வு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வும் கூட.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.