புலிகள்-கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு
சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது. பதிலுக்கு இளங்கோவனை அடக்கி வை என்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 90வது பிறந்தநாள் விழாவில் இளங்கோவன் பேசியதாவது,
பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த சண்டாளர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றனர். அந்த இயக்கத்தைச் சேர்ந்த சண்டாளர் (தமிழ்ச்செல்வன்) ஒருவர் இறந்ததற்கு தமிழக்ததில் ஊர்வலம் நடத்துகிறார்கள். போஸ்டர்கள் அடிக்கிறார்கள்.
உயர்ந்த பதவியில் உள்ள ஒருவரே (முதல்வர் கருணாநிதி) இரங்கற்பா பாடுகிறார். அதை அரசுத் துறையே வெளியிடுகிறது. இது எவ்வளவு பெரிய அவமானம். அதைப்பற்றி கேட்டால் தமிழ் உணர்வு என்கிறார்கள்.
விடுதலைப் புலிகளால் எத்தனை அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ் உணர்வு இல்லையா. காங்கிரசார் முடங்கி, அடங்கி கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சட்டசபை தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அமைச்சரவையில் காங்கிரசாரை சேர்த்திருக்க வேண்டாமா. நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அமைச்சரவையில் சேராமல் இருப்பதுதான் நல்லது.
தமிழகத்தில் தினந்தோறும் வன்முறை நடந்துவருகிறது. கிருஷ்ணசாமி தாக்கப்பட்டுள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது எனச் சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது.
நீங்கள் ஆட்சிக்கு வரும் போது அப்போது தடுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்கிறார்கள்.
சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று நான் சொன்னால், இளங்கோவனை அடக்கி வை என்கிறார்கள். இங்கே நடக்கும் சம்பவத்தை பார்க்கும்போது எப்படி சும்மா இருக்க முடியும்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நடத்தும் ஊர்வலத்துக்கு முதல்வர் கருணாநிதி அனுமதி அளிக்கக்கூடாது. காங்கிரஸ் ஆட்சி வரும் என நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றார் இளங்கோவன்.