தலைமை ஆசிரியர் அடித்ததால் மாணவன் தீக்குளித்து தற்கொலை
ஈரோடு: தலைமையாசிரியர் அடித்ததால் பள்ளியில் படிக்கும் மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் உருமாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி என்பவரின் மகன் குமரேசன்(17).
குமரேசன் பெருந்துறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த வகுப்பிற்கு குமரேசன் போகவில்லை. இதனால் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு போன குமரேசனை தலைமையாசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார்.
தலைமையாசிரியர் கண்டித்ததை சொல்லி உடன்படிக்கும் மாணவர்களும் கேலி செய்துள்ளனர். மாணவர்கள் கேலி செய்ததாலும், பல மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் கண்டித்ததாலும் மனமுடைந்த குமரேசன் அன்று மாலை வீடு திரும்பியதும் மண்ணெண்ணெய் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார்.
மாணவன் தீக்குளித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குமரேசன் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மாணவன் இறந்த செய்தி கேட்டு திரண்ட குமரேசனின் உறவினர்கள், குமரேசன் சாவுக்கு காரணமான தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டுமென்று சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படும் பள்ளி தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் மங்களம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.