இன்ஸ்பெக்டர் அவதூறு பேச்சு-பாமக மகளிரணி பிரமுகர் தற்கொலை முயற்சி
அம்பாசமுத்திரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசியதால் மனமுடைந்த பாமக ஒன்றிய மகளிரணி துணைச் செயலாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
சேரன்மகாதேவி பாமக ஒன்றிய மகளிரணி துணைச் செயலாளராக இருப்பவர் மேரி தமிழரசி. இவரை ஆலங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தூக்க மாத்திரகளை சாப்பிட்டு இவர் தற்கொலை செய்ய முயன்றார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டரைக் கண்டித்து இன்று அம்பையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேரி தமிழரசி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனக்கும், ஆலங்குளத்தை சேர்ந்த ஜோசப் தங்கமணியின் மகன் ஞானராஜூக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. கால் ஊனமுற்ற எனது கணவருடன் திருமணமாகி 3 வருடங்கள் மகிழச்சியாக இருந்தேன். எங்களுக்கு கிறிஸ்டி (10) என்ற மகள் இருக்கிறார்.
இந் நிலையில் என்னிடம் ரூ.80,000 கேட்டு என் கணவர், மாமியார் சரோஜா, கணவரின் தம்பி சலாமன் ராஜா ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தியதால் நான் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போது எனது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.
குணமடைந்த பின்னர் மீண்டும் எனது கணவர் வீட்டுக்கு சென்றபோது என்னை விரட்டி விட்டனர். இதநால் நான் எனது தாயாருடன் பாடகபுரத்தில் வசித்து வந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்து சென்றேன். ஆனால் நான் போவதற்கு முன்னரே அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர்.
உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாக அவரது வீட்டார் தெரிவித்தனர். ஆனால் என் கணவர் இயற்கையாக சாகவில்லை. அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக எஸ்பியிடம் புகார் செய்தேன்.
இந்த புகார் தொடர்பான விசாரணை ஆலங்குளம் காவல் நிலையத்தில் நடந்தது. அங்கு சென்ற என்னை இன்ஸ்பெக்டர் எனது உறவினர்கள் முன்னிலையில் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால் நான் அவமானம் தாங்க முடியாமல் தூக்க மாத்திரகளை தின்று தற்கொலை செய்ய முயற்சித்தேன்.
எனவே என்னை அவமானமாக பேசி தற்கொலைக்கு தூண்டிய ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மற்றும் எனது மாமியார், கணவரின் தம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மேரி தமிழரசி.
மேரி தமிழரசியுடன் பாமக மாவட்டத் தலைவர் முகமது இப்ராகிம், செயலாளர் ஆறுமுகபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை மேற்கு மாவட்ட பாமக சார்பில் அம்பையில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் ஆறுமுக பெருமாள் தெரிவித்துள்ளார்.