கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை அமைச்சர் பலி
கொழும்பு: கொழும்பு அருகே இன்று காலை நடந்த பயங்கர கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி இலங்கை தேச கட்டமைப்புத் துறை அமைச்சர் டி.எம் தசநாயகா பலியானார். 11 பேர் இதில் படுகாயமடைந்தனர்.
இலங்கை அமைச்சரவையில், தேச கட்டமைப்புத் துறை அமைச்சராக இருந்தவர் டி.எம். தசநாயகா (54). இன்று காலை கொழும்பு அருகே நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி அவர் பலியானார்.
புத்தளம் மாவட்ட எம்.பியான தசநாயகா, இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இன்று காலை அவர் தனது ஆதரவாளர்ளுடன் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
கொழும்பு - நெகம்போ சாலையில், கட்டுநாயகே விமானப்படைத் தளம் அருகே அவர்களது கார்கள் வந்தபோது, ருக்மணி தேவி சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பலத்த சப்தத்துடன் வெடித்தது.
இதில் தசநாயகா படுகாயமடைந்தார். அவருடன் வந்த 11 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அமைச்சர் உள்ளிட்டோரை அருகில் உள்ள ரகமா பயிற்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தசநாயகா இறந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, முழு அளவிலான ராணுவ பலத்தைக் காட்டப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.
அந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களிலேயே கண்ணிவெடித் தாக்குதலில் அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதால் கொழும்பில் பதட்டம் நிலவுகிறது.
சம்பவ இடத்தை ராணுவம் முற்றுகையிட்டு சீல் வைத்துள்ளது. குண்டுவெடித்த இடம் போர்க்களம் போலக் காணப்படுகிறது.