ஆளுநர் உரையில் கசப்பு இல்லை, ஆனால் இனிப்பும் புளிப்புமாக..-ராமதாஸ்
சென்னை: ஆளுநர் உரை கசப்பு இல்லாமல் மொத்தத்தில் இனிப்பும், புளிப்பும் கலந்த கலவையாக அமைந்திருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆளுநர் உரையில் அரசின் கடந்த கால சாதனைகளும், செயல்பாடுகளும் மிக விரிவாக இடம்பிடித்த அளவிற்கு எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றின் விலைகள் கட்டுக் கடங்காமல் போய் கொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்பது வரவேற்கத்தக்கது.
இடஒதுக்கீட்டிற்கான உத்தரவை பேரவையில் முதல்வர் வெளியிட வேண்டும். தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.
தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க செய்யவும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன.
2008ம் ஆண்டு இறுதிக்குள்ளாக தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழி என்ற நிலைப்பாட்டை உருவாக்கிட முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்போவது குறித்து ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்புகள் பெரும் மலைப்பை தருவதாக இருக்கின்றன.
வீணாகும் உபரி நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப் போவதாக அறிவித்துள்ளதை பாராட்டுகிறேன். இலங்கையில் அல்லல்படுகிற 25 லட்சம் ஈழத் தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மத்திய அரசை மாநில அரசு உறுதியுடன் வலியுறுத்த வேண்டும்.
மொத்தத்தில் இனிப்பும், புளிப்பும் கலந்த கலவையாக ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. கசப்பில்லை என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இனிப்பும் புளிப்புமாக இருப்பதாக ஆளுநர் உரையைச் சொல்கிறாரா ராமதாஸ் குறிப்பிட்டாலும் அவர் சொல்ல வரும் இனிப்பும் புளிப்பும் திமுக-பாமக இடையிலான உறவைத் தான் என்று தெரிகிறது.
குறையும் இருக்கு நிறையும் இருக்கு: காங்.
கவர்னர் உரையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மன நிறைவை தருகிறது என்று காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கவர்னர் உரையில் தமிழக அரசின் புதிய கொள்கைத் திட்டங்களை பாராட்டி வரவேற்கிறேன். மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளும் என்றும், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் தடுப்பணை அமைத்து வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
நாங்குநேரி மற்றும் கங்கைகொண்டான் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், மதுரவாயல்-சென்னை துறைமுகத்திற்கிடையில் வேக வழிச்சாலை அமைப்பது வரவேற்கத்தக்கதாகும்.
65 வயதை அடைந்த அனைவருக்குமான இந்திராகாந்தி ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது என்றும், 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
குறைபாடுகள்:
ஆனால், வெள்ளம், பெருமழை நிவாரணத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள ரூ.200 கோடி போதாது. மேலும் நெல், கரும்பு விவசாயிகளுக்கான இன்னல் தீர எதுவும் கவர்னர் உரையில் இல்லை. சிமெண்டு விலை மேலும் குறைப்பது தொடர்பாக கவர்னர் உரையில் அறிவிப்பு இல்லை.
தமிழகத்தில் தீவிரவாதம், அதிலும் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரையில் தெரிவித்திருக்கலாம்.
இது போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் கவர்னர் உரை மனநிறைவை அளித்துள்ளது என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி