தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீச்சு
தென்காசி: தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பைப் குண்டு வீசப்பட்டது. இதேபோல பேருந்து நிலையத்திலும் குண்டு வீசப்பட்டதில் ஒரு ஆட்டோ சேதமடைந்தது.
தென்காசி நகரில் கடந்த வருடம் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்தன. இந்த சம்பவங்களால் அங்கு பெரும் பதட்டம் நிலவி தற்போதுதான் அமைதி திரும்பியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அலுலகம் மீது சிலர் பைப் குண்டை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னிமாரம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் உள்ளது. நேற்று இரவு 9.30 மணியளவில் அங்கு திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இரண்டு பைப் கள் மற்றும் வெடிமருந்து தரையில் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பைப் குண்டு வீசப்பட்டது தெரிந்தது.
இந்த சம்பவத்தின் போது ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் யாரும் இல்லை. எனவே ஆட்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை. அதேசமயம், அலுவலகத்தின் கதவின் ஒரு பகுதி சேதமடைந்தது.
தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. மயில்வாகணன் விரைந்து வந்து விசாரணை மேற்கொகண்டார்.
இந்தத் தகவல் பரவியதும் தென்காசியில் பதட்டம் ஏற்பட்டது. திறந்திருந்த கடைகள் மூடப்பட்டன.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில், தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்தது.
அங்கு கேரள மாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் இந்த குண்டு வெடித்தது. ஒரு லாரியின் அருகே பலத்த சப்தத்துடன் இக்குண்டு வெடித்தது.
இதில் ஒரு ஆட்டோ சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவத்தால் தென்காசியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருமளவிலான போலீஸார் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை எஸ்.பி. ஸ்ரீதர் தென்காசியில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
குண்டு வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பு இரவு 7 மணி வரை இந்து முண்ணனி அமைப்பாளர் ராஜூ இருந்துள்ளார். சம்பவத்துக்கு முன்னதாக அவர் சென்று விட்டதால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து நெல்லை மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் குமரேச சீனிவாசன் கூறுகையில் வெடிகுண்டு வீசிய விஷமிகளை உடனே கைது செய்ய வேண்டும். தென்காசி நகரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை போட வேண்டும் என்றார்.
குண்டு வீச்சு தகவல் நகரில் காட்டூத் தீ போல் பரவியது. இதனால் கூலக்கடை பஜார், சுவாமி சன்னதி உள்பட நகரின் முக்கிய வீதிகளில் திறந்திருந்த கடைகள் அவசர அவசரமாக மூடப்பட்டன.