மது விருந்தில் விபரீதம்: மாடியிலிருந்து விழுந்த மிஷ்கின் டிரைவர் மரணம்

தமிழ்த் திரையுலகில் புதிய படம் திரையிடப்படும்போது படக்குழுவினருக்கு மது விருந்து அளிப்பது சகஜமாகி வருகிறது. இத்தகைய விருந்து நிகழ்ச்சிகளின்போது தாராளமாக மது சப்ளை செய்யப்படும். அதிக அளவில் மது அருந்தும்போது சில நேரங்களில் விபரீதங்களும் ஏற்பட்டு விடுகிறது.
கடந்த ஆண்டு சிவாஜி படம் திரைக்கு வந்தபோதும் இயக்குநர் ஷங்கர் தனது பண்ணை இல்லத்தில் பெரிய மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் படக்குழுவினர் பெருமளவில் கலந்து கொண்டு மது அருந்தினர். அப்போது படக்குழுவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞர் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் அஞ்சாதே படக் குழுவினரும் இதுபோன்ற ஒரு அசம்பாவிதத்தை சந்தித்துள்ளனர். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள அஞ்சாதே, வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் படக் குழுவினருக்கு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விருந்தில் மிஷ்கினிடம் கார் டிரைவராகப் பணியாற்றி வந்த முருகன் (36) என்பவரும் கலந்து கொண்டார்.
விருந்தில் கலந்து கொண்டவர்கள் தாராளமாக மது அருந்தியுள்ளனர். இந்த சமயத்தில் அதிக அளவில் மது அருந்திய முருகன் 2வது மாடியில் உள்ள அறையில் தங்கினார்.
நேற்று அதிகாலையில் தனது அறையிலிருந்து அவர் வெளியே வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே முருகன் உயிரிழந்தார்.
மர்ம மரணமாக போலீஸார் இந்த சம்பவத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் மிஷ்கினுக்கும், முருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications