அதியமான்கோட்டை போலீசாருக்கு உண்மை கண்டறியும் சோதனை
தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு 6 துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாக்கிடாக்கி ஆகியவை காணாமல் போயின. இதை நக்சலைட்டுகள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலைய போலீசார் கூறினர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் ராஜா, ராஜமாணிக்கம், காவலர் சுப்பிரமணி ஆகியோர் பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 18 பேர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
ஆனால், போலீசார் எதையோ மறைப்பதாக சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும் காவல் நிலையத்தை ஒட்டிய வயல்களிலும் கிணறுகளிலும் சோதனை நடத்தினர்.
இதில் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோட்டத்தில் அவை புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 5 துப்பாக்கிகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியைக் காணவில்லை. அதேபோல வாக்கி டாக்கியும், இன்னொரு துப்பாக்கியும் சிக்கவில்லை.
இந் நிலையில் இச்சம்பவத்தின் பின்னணியில் நக்சலைட்டுகள் இல்லை என்பது உறுதியானது. எனவே அதியமான் கோட்டை காவல் நிலைய போலீஸார் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.
ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நாடகமாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், கள்ளச்சாராய வியாபாரிகள் அல்லது அரசியல்வாதிகள், ஏதேனும் ஜாதி சங்கத்தினரும் இதன் பின்னணியில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீஸார் தவிர காவல் நிலைய டைப்பிஸ்ட் செந்தில்குமார், இன்ஸ்பெக்டரின் டிரைவர் சின்னப் பையன், ரைட்டர் தங்கவேல், காவலர் பார்த்திபன் ஆகியோரும் போலீஸின் சந்தேகப் பார்வையில் விழுந்துள்ளனர்.
இதையடுத்து 8 பேருக்கும் சென்னை அயனாவரம் அருகே உள்ள மனநல மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் ராஜா, ராஜமாணிக்கம், தங்கவேல், பார்த்திபன், காவலர் சுப்பிரமணி, டைபிஸ்ட் செந்தில் குமார், டிரைவர் சின்னப் பையன் ஆகிய அதன்படி 8 பேரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய பின் இன்று அவர்களுக்கு 'ட்ரூத் சீரம்' (Truth seerum) கொடுக்கப்பட்டு, 'லை
டிடெக்டர்கள்' (lie detector) மூலம் மன நல மருத்துவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர்.
ஏற்கனவே இவர்களில் பேருக்கு தர்மபுரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்குமார் எச்சரிக்கை:
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கூடுதல் டிஜிபி விஜயக்குமார் கூறுகையில், 5 துப்பாக்கிகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. யார், என்ன காரணத்திற்காக, எந்த நோக்கத் திற்காக இந்த காரியத்தை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
தவறு செய்தவர்கள் தாமாக முன் வந்து குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, எச்சரிக்கையும் கூட. குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பொது மக்களும் நல்ல ஒத்துழைப்பும் தகவல்களும் தந்தார்கள். அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
துப்பாக்கிகளை கண்டுபிடித்த காவலர்களுக்கு வெகுமதி கொடுக்கப்பட்டு விட்டது. இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், உதயகுமார் ஆகியோரைக் கொண்ட குழு தான் துப்பாக்கி புதைத்து வைத்து இருக்கும் இடத்தை பார்த்தது.
மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. தவறு செய்த போலீசார் அவர்களாக வருந்தி, முன்வந்து தகவல் சொல்வது நல்லது. அப்படி வராவிட்டால் நாங்களே கண்டு பிடிப்போம். நிச்சயம் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்.
ஒரு துப்பாக்கியும், வாக்கி டாக்கியும் மீட்கப்பட வேண்டும். ஒரு குண்டூசி கூட விடாமல் அனைத்தும் மீட்கப்பட்டுவிடும் என்றார் அவர்.