நடிகர்கள் உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி
சென்னை: சென்னையில் திரைத் துறையினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி விட்டது. சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இந்த உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
உண்ணாவிரத ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. வெளியூர் படப்பிடிப்பில் இருப்பவர்களும், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புகிறார்கள்.
திரையுலகினர் ஏற்கனவே நடத்திய பல போராட்டங்களில் நடிகர்-நடிகைகளில் குறிப்பிட்ட சிலர் பங்கேற்கவில்லை. சில காரணங்களை சொல்லி ஒதுங்கினர். உண்ணாவிரதத்தில் அது போல் எவரேனும் ஒதுங்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை கே.ஆர்.ஜி உள்ளிட்டோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முறைப்படி அனுமதி கோரி கடிதம் அளித்தனர். அப்போது நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் கே.ஆர்.ஜி. நிருபர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் தமிழ் படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி கன்னட வெறியர்கள் அட்டூழியம் செய்கின்றனர்.
தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம். சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
குள்ளமணி முதல் ரஜினி வரை ..
உண்ணாவிரதத்தில் திரையுலகைச் சேர்ந்த அத்தனை பேரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குள்ளமணி முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பெரிய நடிகர் களை வெளிப்படையாக அழைத்துள்ளோம். மற்ற நடிகர்கள் பத்திரிகைகள் மூலம் இப்போராட்டம் பற்றி தெரிந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.
கலந்து கொள்ளாத நடிகர்களுக்கு நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் திரையுலகம் எந்த ஒத்துழைப்பையும் அளிக்காது என்றார்.
இந்த நிலையில் திரையுலகினரின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் நடக்கும் 4ம் தேதி வெளியூர் படப்பிடிப்புகளும் நடைபெறாது. சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் நடக்காது. நடிகர் சங்கஉறுப்பினர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர், பெப்சி தொழிலாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள் என பல தரப்பினரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும். மாலை 5 மணி வரை நடை பெறும்.
பலத்த பாதுகாப்பு:
உண்ணாவிரதத்துக்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.