சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தார் கலாம்: உதவியாளர்
டெல்லி: சோனியா காந்தியை பிரதமராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தயாராக இருந்தார். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார் என்று கலாமிடம் உதவியாளராக இருந்த பி.எம்.நாயர் கூறியுள்ளார்.
பி.எம்.நாயர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர். தற்போது 'The Kalam Effect: My years with the President' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் நாயர்.
அதில் சோனியா காந்தி குறித்து பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார் நாயர். அந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.
2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது நான் இப்போது என்ன செய் வேண்டும் என்று ஆலோசனை கேட்டார் கலாம்.
அப்போது, எந்தக் கட்சி அல்லது கூட்டணியால் நிலையான அரசை அமைக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்தக் கட்சி அல்லது கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என்று கலாமுக்கு அறிவுரைக்கப்பட்டது.
அதற்கு கலாம், ஆனால் நீண்ட காலம் அதற்காக காத்திருக்க முடியாதே என்று கலாம் கேட்டார்.
அதன் பின்னர் தனது உதவியாளர்களின் ஆலோசனைப்படி 2004ம் ஆண்டு மே 17ம் தேதி சோனியா காந்தியை வந்து தன்னை சந்திக்கும்படி கடிதம் அனுப்பினார் கலாம்.
அதற்கு, சோனியா காந்தி ஆதரவுக் கடிதங்களுடன் வந்து குடியரசுத் தலைவரை சந்திப்பார் என கலாமுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நான், ஆதரவுக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் விவரத்தை நீங்கள் முழுமையாகப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்மதம் என்று மட்டும் தெரிவித்து விடுங்கள் என்றேன். அவரும் சரி என்றார்.
அதன் பின்னர் சோனியா காந்தியை பிரதமராக நியமிக்கும் கடிதத்துடன் நான் காத்திருக்கிறேன். அதில் கையெழுத்திட்டு சோனியா காந்திக்கு கையெழுத்திட்டு வாழ்த்து கூறுங்கள். மேலும் எப்போது பதவியேற்க உள்ளீர்கள் என்றும் அவரிடம் கேளுங்கள் என்று தெரிவித்தேன். அதற்கு கலாம் சரி என்று தெரிவித்தார் என்று கூறியுள்ளார் நாயர்.
ராஜினாமா செய்யத் தயாரானார்:
இதேபோல பீகார் அரசைக் கலைத்தது தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பியுள்ளார் கலாம்.
இதுகுறித்து நாயர் தனது நூலில் கூறுகையில், கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தபோது எந்த ஒரு கட்சிக்கும், கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 3 மாதங்களுக்குள் அங்கு ஆட்சி அமைக்க கட்சிகள் குதிரை பேரம் நடத்துவதாகவும், ஆட்சியைக் கலைப்பதுதான் ஜனநாயகத்தைக் காக்க ஒரே வழி என்று ஆளுநர் பூட்டாசிங் பரிந்துரைத்தார்.
இதைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவையும் ஆட்சியைக் கலைக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. அப்போது அப்துல் கலாம் மாஸ்கோவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். மே 23ம் தேதி பின்னரிவு நேரத்தில் அவருடன் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மன்மோகன் சிங் போனில் பேசினார்.
பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடுவது ஏன் என்பது குறித்து அவர் குடியரசுத் தலைவரிடம் விளக்கினார். இதையடுத்து தனது உதவியாளர்களுடன் கலாம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அனுமதி அளிக்கும் உத்தரவை மாஸ்கோவிலிருந்து அனுப்பினார்.
ஆனால் இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்தன. மேலும் ஐந்து மாதங்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அது விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட்டும் கண்டனம் தெரிவித்தது. இதுவும் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்த சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அமைதியாகவே காணப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் என்னை அழைத்தார். மிஸ்டார் நாயர், முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறேன் என்று கூறி தனது பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை சுட்டிக் காட்டினார். எனது மனசாட்சிப்படி முடிவெடுத்துள்ளேன் என்றார். அது ராஜினாமா முடிவு என்று எனக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து கலாம் என்னிடம் கூறுகையில், ஆட்சிக் கலைப்பு பரிந்துரையை மறு பரிசீலனை செய்யும்படி மத்திய அமைச்சரவையை நான் கேட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு நாள் வரை பொறுத்திருக்கலாம் என்றார்.
அதற்கு நான், ஆளுநரின் அறிக்கை, மத்திய அமைச்சரவையின் பரிந்துரை, பிரதமரின் தொலைபேசிப் பேச்சு ஆகியவற்றின் அடிப்படையில்தான் நாம் இந்த முடிவை எடுத்தோம். எனவே அதில் தவறு இல்லை என்றேன். இதைத் தொடர்ந்து தனது ராஜினாமா முடிவை அவர் மாற்றிக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார் நாயர்.
நாயரின் இந்த நூல் இன்று விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.