பாலு பதவியை ரத்து பண்ணனும்: சு. சுவாமி
சென்னை: தனது குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்காக பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ள டி.ஆர்.பாலுவின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
சென்னையில் இன்று சுவாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அருகே உள்ள மசூதி தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்க அனுமதி கிடையாது.
ஆனால் தற்போது முதலமைச்சர் கருணாநிதி மாவட்ட காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்; அந்த உத்தரவில் முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்த வந்தால், தடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
இது மதக்கலவரத்தை தூண்டுவதற்கான மறைமுகை சதியாகும். எனவே இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். அந்த மசூதியில் தொழுகை நடத்த அனுமதித்தால், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நான் உயர்நீதி மன்றத் தில் வழக்குத்தொடுக்க உள்ளேன்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது குடும்ப நிறுவனத்துக்கு வங்கி உத்தரவாதம் கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கிகளில் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாததால் வழக்கு நடைபெறும் நிலையில் அவர் வங்கி உத்தரவாதம் கொடுத்தி ருப்பது தவறானது. எனவே அவரது எம்பி பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
நளினியை விடக் கூடாது:
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரை விடுதலை செய்யக்கூடாது.
அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சட்ட விரோதம் என்று ஏற்கனவே நான் கவர்னருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளேன். குடியரசுத் தலைவர் மட்டும்தான் தண்டனை குறைப்பு வழங்க முடியும்.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த நளினி, இந்த படுகொலை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அவருக்கு பாடம் கற்றுக் கொடுக்கவே இந்த காரியத்தை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட நீதிபதி, நளினிக்கு ஒரு குழந்தை இருந்தாலும் நான் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறேன். இவ்வளவு பெரிய படு கொலையை செய்துவிட்டு அது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த நளினிக்கு கருணை காட்ட முடியாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார். அப்படிப்பட்ட நளினிக்கு கருணை காட்டுவது தேச துரோகச் செயலாகும்.
வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி பிரியங்கா சந்திப்பில் பேசப் பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இவர்கள் தனியாக பேசி முடித்த பிறகு அதன் விவரங்களை வயர்லெஸ் மூலமாக சிங்கப்பூர் வழியாக இலங்கையில் உள்ள புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு நளினி தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பாக நளினி, பிரியங்கா, சோனியா ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
கண்ணகி - கருணாநிதி - சோனியா:
கணவர் கொல்லப்பட்டதற்கு மதுரையை எரித்த கண்ணகிக்கு விழா கொண்டாடும் கருணாநிதி ஒருபுறம்; கணவரை கொன்ற கும்பலுக்கு கருணை காட்டும் சோனியா மறுபுறம். இவர்கள் கூட்டணிக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். இதன் பின்னணியில் மோசமான ஒப்பந்தம் ஒன்று உள்ளது.
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். அப்படி தலையிடுவது என்றால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கொழும்பில் இந்திய ராணுவ முகாம் வேண்டும்:
அந்நாட்டு தலைநகர் கொழும்பில் 25 ஆயிரம் துருப்புகளைக்கொண்ட தனி ராணுவ முகாம் ஒன்றை இந்தியா அமைக்க வேண்டும். ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறினால், கொழும்பை கைப்பற்றுவதற்கு இந்த முகாமை அமைக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் மட்டுமே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதில் விடுதலைப்புலிகள் பங்கேற்கக்கூடாது. புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.