கடும் அமளிக்கு இடையே மகளிர் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்
டெல்லி: ராஜ்யசபால் இன்று கடும் அமளிகளுக்கு மத்தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இதை நிறைவேற்றுவதில் பல கட்சிகள் முட்டுக்கட்டை போட்டதால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தக் கூட முடியாத அவலம் நீடித்து வந்தது.
மசோதாவுக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சரத் யாதவின் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இந்த மசோதாவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு, அதுவும் இந்த அளவுக்குத் தேவையில்லை என்பது இந்த கட்சிகளின் நிலை.
மேலும், தாழ்த்ப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு தனித் தனியாக ஒதுக்கீடு தர வேண்டும் என்பதும் இவர்களின் கருத்து.
இந்த நிலையில் நேற்று இரவு மத்திய அமைச்சரவை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடி மகளிர் மசோதா குறித்து விவாதித்தது. பின்னர் ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை மசோதாவைத் தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
பறிக்க முயன்ற சமாஜ்வாடி
அதன்படி இன்று ராஜ்யசபாவில் மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இன்று காலை மாநிலங்களவை கூடியதும், சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ், மகளிர்மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். அப்போது சமாஜ்வாடி கட்சியினர் திரண்டு வந்து பரத்வாஜ் கையில் இருந்த மசோதா நகலைப் பறிக்க முயன்றனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பிக்கள் திரண்டு வந்தது பரத்வாஜை சுற்றி மனிதச் சங்கிலி போல கைகளை சேர்த்து நின்று கொண்டு சமாஜ்வாடி எம்.பிக்களின் முயற்சியை முறியடித்தனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், சமாஜ்வாடி எம்.பிக்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களுடன், ஐக்கிய ஜனதாதளத்தினரும் இணைந்து கொண்டனர். இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் மசாதோவை வெற்றிகரமாக தாக்கல் செய்தார்.
அமைச்சரின் கையில் இருந்த மசோதாவைப் பறிக்க முயன்ற சமாஜ்வாடி உறுப்பினர் அபு அசிம் அஸ்மியை, மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி விரைந்து வந்து பிடித்துத் தள்ளி விட்டார்.
பெண்கள் பாதுகாப்பில் பரத்வாஜ்:
பரத்வாஜை சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதள எம்.பிக்கள் நெருங்கி விடாமல் தடுக்கும் வகையில், அவருக்கு அருகில் குமாரி செல்ஜா மற்றும் அம்பிகா சோனி ஆகிய அமைச்சர்கள் அரண் போல நின்றனர். இவர்கள் தவிர ஜெயந்தி நடராஜன், அல்கா பல்ராம் ஷத்ரியா ஆகியோரும் பரத்வாஜுக்கு பாதுகாப்பாக நின்றனர்.
பெண் அமைச்சர்கள் பரத்வாஜை சுற்றி நின்று கொண்டதால், சமாஜ்வாடி எம்.பிக்களால் அவர்களைத் தாண்டி மசோதாவைப் பறிக்க முடியவில்லை.
அவையில் இந்த அமளி நடந்து கொண்டிருந்ததை பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும், லோக்சபா எம்.பிக்கள் பலரும் பார்வையாளர் மாடத்திலிருந்து இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications