தமிழ்நாடு ஒளிர்கிறது..தமிழர்கள் ஒளிரவில்லை-ராமதாஸ்

தமிழ்நாடு சான்றோர் பேரவை தொடக்க விழா சென்னையில் நடந்தது. அதி்ல், தமிழகத்தின் வளர்ச்சியில் தமிழ்நாட்டினரின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில், ராமதாஸ் பேசுகையில்,
தமிழ்நாடு சான்றோர் பேரவையில் தமிழ்நாட்டில் பல துறைகளில் உள்ள விற்பன்னர்கள், ஓய்வு பெற்றவர்கள் உறுப்பினராக சேர வேண்டும். அரசியல்வாதிகள் இடம்பெறக் கூடாது. ஆனால், நீங்கள் கருத்தரங்கங்கள் நடத்தி அரசியல்வாதிகளை கூப்பிடலாம்.
குறைகளை சுட்டிக்காட்டினால் அரசில் உள்ளவர்களுக்கு கோபம் வருகிறது. அரசு நடத்துபவர்களுக்கு கோபம் வரக்கூடாது.
தமிழகத்தில் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் பல்வேறு துறைகள் உள்ளன. இதில் உள்ள துறைத் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக ஏதாவது ஆய்வு செய்து கருத்து கூறியிருக்கிறார்களா?
அரசியல்வாதிகள் புகழ்ச்சிக்கு அடிமையாகி விடுகின்றனர். அதனால், குறை கூறினால் அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். தமிழ்நாடு சான்றோர் பேரவை தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடங்க வேண்டும். அரசுக்கு பல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 25 சதவீதத்தை சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
தற்போது 11வது ஐந்தாண்டு திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால், இப்போதுள்ள நிலையில் விவசாயி நான் வாழ வேண்டுமா? சாக வேண்டுமா?' என்று கேட்கிறான். விவசாயம் லாபகரமாக இல்லை.
இலவச கலர் டி.வி. கொடுப்பதை நிறுத்திவிட்டு, இலவசமாக விதை கொடுங்கள் என்று நான் கூறினால் அரசு கோபப்படும். ஆனால், இதை இந்த பேரவை சொல்லலாம்.
இயற்கை வேளாண்மைதான் நிலைத்த வேளாண்மை. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இங்குள்ள முதலாளிகளிடம் பணம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.
ரூ. 5 கோடி, 10 கோடியில் தொழில் தொடங்குபவர்கள் தமிழகத்தில் இல்லையா?. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மக்களிடம் உள்ள நிலங்கள் வாங்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் தமிழக அரசு வெளியிட வேண்டும். சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்பவர்களில் எத்தனை பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
30 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். முதலில் 30,000 பேருக்கு வேலை கொடுக்கிறார்களா என்று பார்ப்போம்.
தற்போது சாராயம், குடி, புகை போன்றவை தான் வளர்ந்துள்ளது. தென்மாவட்டங்களில் பீடி சுற்றும் தொழிலில் குழந்தைகள், பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று திட்டம் வேண்டும்.
தமிழ்நாடு ஒளிர்கிறது. ஆனால், தமிழர்கள் ஒளிரவில்லை. 28 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். இவர்கள் தினமும் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகின்றனர்.
இலவசம் என்னும் நிலை தொடரக்கூடாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு கட்டாய கல்வி, தரமான கல்வி, கட்டணமில்லாத கல்வி, தொழிற்கல்வியை கொண்டுவர அரசு முன் வர வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications