சென்னை கோயம்பேடில் ப்ரீ-பெய்டு ஆட்டோ
சென்னை: கோயம்பேடு ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு ஆட்டோ கட்டண வசதியை (ப்ரீ பெய்டு) போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிற் சங்கம், விடுதலை சிறுத்தைகள், ஏஐடியூசி ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த 450 ஆட்டோ ஓட்டுனர்கள் இணைந்துள்ளனர்.
இதற்கான கவுண்டர் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ரூ.2 செலுத்தி எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதற்கு முன்பதிவு செய்து ரசீது பெற்று கொள்ள வேண்டும். போய் சேர வேண்டிய இடத்தில் சென்று இறங்கியதும் பயண கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து நேரு பேசுகையில்,
சென்னையில் பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களை கேஸ் ஆட்டோக்களாக மாற்றுவதற்கு அரசு ரூ. 2,000 தருவதாக அறிவித்துள்ளது. கூடுதலாக ரூ. 2,000 வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்டர் கட்டணம் உயர்த்துவது மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் கல்வி வரம்பு நிர்ணயம் பற்றி தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இது பற்றி முதல்வரி கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ஆட்டோக்களில் மீட்டர் பொறுத்துவதற்கு அரசு நிதி உதவி அளிக்காது. பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு சென்னையில் இனிமேல் அனுமதி இல்லை.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தினமும் 3,500 பஸ்கள் வந்து செல் கின்றனர். 7,75,000 பயணிகள் வந்து செல்கின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ பெய்டு ஆட்டோ வசதி தொடங்கப்பட்டுள்ளது போல் மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் தொடங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும்.
மதுரை பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ வசதி வரும் 31ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இந்த வசதியை உருவாக்க முயற்சிக்கப்படும்.
சென்னையை விட பெரிய நகரமான மும்பையில் கூட ஆட்டோ கட்டணத்தில் பிரச்சனை இல்லை. ஆட்டோ டிவைர்களுடன் போட்டி போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பிரச்சனை இல்லாமல் கட்டணம் வாங்குங்கள், மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
சென்னையில் தினமும் 44 லட்சம் பேர் பஸ்சில் பயணம் மேற்கொண்டார்கள். இப்போது அவர்களது எண் ணிக்கை 49 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் புதுப் புதுப் பேருந்துகள் மற்றும் கட்டண குறைவுதான் என்றார் நேரு.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து முக்கிய இடங்களுக்கு பிரீபெய்டு ஆட்டோ கட்டண விவரம்:
மீனம்பாக்கம்- ரூ. 111
டைடல் பார்க்- ரூ. 150
திருவான்மியூர் பஸ் நிலையம்- ரூ. 165
கிண்டி- ரூ. 76.80
லயோலா கல்லூரி- ரூ. 53.40
மாதவரம்- ரூ. 147
முகப்பேர் மேற்கு- ரூ. 66.00
எழும்பூர் ரயில் நிலையம்- ரூ. 72
உயர் நீதிமன்றம்- ரூ. 111
அப்பல்லோ மருத்துவமனை- ரூ. 80
புரசை அபிராமி- ரூ. 76.50
கெல்லீஸ்- ரூ. 75
கீழ்ப்பாக்கம்- ரூ. 69
ஸ்டான்லி மருத்துவமனை- ரூ. 129
அண்ணா நகர் ரவுண்டானா- ரூ. 40
அடையாறு- ரூ. 119
அம்பத்தூர் புதூர்- ரூ.120
சாலிகிராமம்- ரூ. 39
கடற்கரை ரயில் நிலையம்- ரூ.115
சைதாப்பேட்டை- ரூ. 102