கடலூர் சைக்கோ' பிடிபட்டான்: கொலைகள்-4
கடலூர்: கடலூரில் தொடர் கொலைகளால் மக்களை பீதயில் ஆழ்த்தி வந்த சைகோ கொலைகாரன் பிடிபட்டான்.
கடந்த 9ம் தேதி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொத்தவாச்சேரி கிராமத்தில் நள்ளிரவில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் ஆகியோரை மர்ம மனிதன் இரும்புக் கம்பியால் தாக்கினான். இதில் பாலசுப்பிரமணியம் பலியாயினர்.
14ம் தேதி ரவி, அவரது மனைவி ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினான். இதில் ரவி பலியானார்.
கொத்தவாச்சேரி அருகே உள்ள எடக்கொண்டான்பட்டு கிராமத்தில் காணாமல் போன சுப்புலட்சுமி (17) என்ற இளம் பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவரையும் மர்ம மனிதனே கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசியதாக கிராம மக்கள் கூறினர்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் வடலூர் பார்வதிபுரத்தில் ராஜாயி அம்மாள் (60) என்ற முதிய பெண்மணி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளான்.
இதில் பலத்த காயமடைந்த ராஜாயி அம்மாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலைமை மோசமாகவே சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளின்றி இறந்தார்.
இந்த தொடர் தாக்குதல்கள் மற்றும் சாவுகளால் அந்தப் பகுதியில் பெரும் பீதி பரவியது. மக்கள் இரவில் தூங்காமல் விழித்திருக்க ஆரம்பித்தனர். ஆண்கள் வீடுகளின் வெளியே தீப்பந்தம், அரிவாள்களுடன் காவலுக்கு இருந்து வந்தனர்.
மாலையாகிவிட்டால் ஊரில் ஆட்கள் நடமாட்டமே நின்றுவிட்டது.
இந்த விவகாரத்தில் எந்தத் துப்பும் கிடைக்காமல் போலீசார் தடுமாறி வந்தனர். இதையடுத்து இந்த மர்ம சாவுகள் குறித்து சிபிசிஐடி போலீசாரும் விசாரிக்க ஆரம்பித்தனர்.
சிபிசிஐடி எஸ்பி ராதிகாவே நேரடியாக களமிறங்கினார்.
அதே போல கூடலூர் எஸ்பி பிரதீப் குமாரும் நேரடியாக விசாரணையில் இறங்கினார். 250 போலீசாரைக் கொண்ட தனிப் படைகளை உருவாக்கி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டார். மேலும் அந்தப் பகுதி காவல் நிலையங்களில் உள்ள பைல்களையும் புரட்டினார்.
அதில் சந்தேகப்படும்படியாக திரிந்து கைதாகி விடுதலையானவர்களின் பட்டியலை கையில் எடுத்து அவர்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக புவனகிரி காவல் நிலையத்தில் கிடைத்த ஒரு பைல் எஸ்பி பிரதீ்ப் குமாரை நிமிர்ந்து உட்கார வைத்தது. சந்தேகப்படும்படியாகத் திரிந்ததாகக் கைதான சரவணன் (28) என்ற நபரின் அடையாளமும், தாக்கப்பட்ட மக்கள் சொன்ன அடையாளமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்க அவனை பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சிதம்பரம் அருகே ஒரு வீட்டில் வைத்து சரவணனை போலீசார் அமுக்கினர். அவனிடம் விசாரித்தபோது எல்லா கொலைகளையும் தாக்குதல்களையும் ஒப்புக் கொண்டான்.
சிறு வயதில் இருந்தே லேசாக மன நிலை பாதிக்கப்பட்ட இவன் சில ஆண்டுகளுக்கு முன் கொத்தவாச்சேரி கிராமத்தில் இரவில் நடமாடியுள்ளான். அப்போது இவனைப் பிடித்த அந்த கிராம மக்கள் அடித்து, உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனால் இந்த கிராமத்தினரை பழி வாங்கும் முடிவுக்கு வந்தான் சரவணன். ஏற்கனவே மன நலமும் பாதிக்கப்படிருந்தவனின் ஆழ் மனதில் கொலை வெறி கிளம்பவே தனது தொடர் தாக்குதலை நடத்தியுள்ளான்.
இளம் வயதில் மன அழுத்ததுக்கு உள்ளான சரவணன் 'பைபோலார் டிஸ்-ஆர்டர்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சில காலத்துக்கு முன் தனது தாயைக் கூட கொலை செய்ய முயன்றுள்ளான் சரவணன்.
இத் தகவல்களை இன்று ஐஜி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications