அணு சக்தியும் 'குதிரை சக்தி'யும்-அத்வானி
நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 7 பாஜக எம்.பிக்கள் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி இல்லத்தில் பாஜக தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மாற்றி வாக்களித்த எம்.பிக்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டது.
8 எம்.பிக்கள் நீக்கம்:
எம்.பிக்கள் பிரிஜ்பூஷன் சரண் சிங்,சோமாபாய் படேல், மனோரமா மாதவராஜ், சங்கிலியானா, மஞ்சுநாத் குன்னூர், பாபுபாய் கட்டாரா, ஹரிபாய் தாக்கூர், ஸ்ரீகண்டப்பா ஆகியோர் ஆகியோர் மாற்றி ஓட்டுப் போட்டவர்கள் ஆவர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், கட்சியின் உத்தரவை மீறி வாக்களித்த 8 எம்.பிக்களும் நீக்கப்படுவர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கறை படிந்த வெற்றி
பின்னர் அத்வானி பேசத் தொடங்கினார். அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில கட்சி தாவி எம்.பிக்களால்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது ஒரு கறை படிந்த வெற்றியாகும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற குதிரை சக்தி (குதிரை பேரம்) அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது.
குதிரை பேரத்தால்தான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெருமளவில் பணம் கொடுத்தும் கூட அதை ஏற்க மறுத்து அவர்களை நாடாளுமன்றத்திலேயே அம்பலப்படுத்திய 3 பாஜக எம்.பிக்களை நான் பாராட்டுகிறேன்.
இந்த விவகாரம் குறித்து லோக்சபா சபாநாயகர் விரிவான விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர வேண்டும்.
1989ம் ஆண்டு தேர்தலை பெருமளவில் கலக்கிய போபர்ஸ் பேர ஊழலைப் போல இந்த குதிரை பேர ஊழல் எனக்குத் தோன்றுகிறது.
உலக அரங்கில் மிகவும் பழமைவாய்ந்த, சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா பார்க்கப்பட்டு வருகிறது. அந்தப் பெயருக்கு இந்த லஞ்ச விவகாரம் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
பண வீக்கம் மிக மோசமாக உள்ளது. நக்சலைட் தொல்லை நாடு பூராவும் பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.
இவை அனைத்தும் தேர்தல் பிரச்சினையாக இருக்கும். பாஜக இவற்றை தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைக்கும் என்றார் அத்வானி.