எந்தப் பாலத்தையும் இடிக்கவில்லை-உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில்
ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது என்று கூறி பாஜக, இந்து அமைப்புகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து அந்தப் பாலத்தை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடங்கின.
மேலும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற 8 மாற்றுப் பாதைகள் இருந்தாலும் ராமர் பாலத்தை இடிப்பதிலேயே அரசு குறியாக உள்ளது. இதனால் அந்தப் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்புகள் சார்பில் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில்,
ராவணனிடம் இருந்து தனது மனைவி சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்காக, வானர சேனைகள் உதவியுடன் ராமர் பாலத்தை கட்டினார் ராமர் என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையாகும். எனவே, ராமர் பாலத்தை காக்க அதை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தன.
மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நரிமன் வாதாடினார்.
அபபோது பேசிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். மத நம்பிக்கையும் முக்கியம், இயற்கையும் (biosphere) முக்கியம். இயற்கைக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை, நம்பிக்கைகள் புண்படும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்றனர்.
நீதிபதி ரவீந்திரன் கூறுகையில், இந்த விஷயத்தில் பிரச்சனையே இல்லை. அதை அரசே தேவையில்லாமல் கிளப்பக் கூடாது. வேறு பாதையே இல்லை என்றால் பரவாயில்லை. மாற்றுப் பாதைகளும் வழிகளும் இருக்கையில் ராமர் பாலத்தை சேதப்படுத்தித்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன் என்றார்.
இதற்கு பதிலளித்த நரிமன், அந்தப் பாலத்துக்கு யாரும் போய் வழிபாடு நடத்துவதில்லை. அது இப்போது வழிபாட்டுத் தலமாகவும் இல்லை. ஆனாலும் நீதிமன்றத்தின் யோசனையை ஏற்கிறேன். இதை நிச்சயம் மத்திய அரசிடம் எடுத்துரைப்பேன் என்றார்.
இதையடு்த்துப் பேசிய நீதிபதிகள், மத நம்பிக்கைகளையும் மதித்து பாதையை கொஞ்சம் மாற்றினால் நல்லது. ஆனால், இந்த பாதை மாற்றம் தொழில்நுட்பரீதியாக, அறிவியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, குறிப்பாக, அரசியல்ரீதியாக சாத்தியமா என்பதை அரசு ஆராய வேண்டும் என்றனர்.
'பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார்':
அதற்குப் பதிலளித்த நாரிமன், சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக எந்தப் பாலத்தையும் (ராமர் பாலம்) நாங்கள் இடிக்கவில்லை. அப்படி எந்தப் பாலமும் அங்கில்லை.
அந்தப் பாலத்தை ராமரே தனது அம்பால் சிதறடித்துவிட்டதாக கம்ப ராமாயணம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வருவதற்காக போடப்பட்ட பாலத்தை, இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் ராமர் இடித்து விட்டதாக கம்ப ராமாயாணம் தெரிவிக்கிறது.
எனவே எந்தப் பாலத்தையும் இடிக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம் எந்தப் பாலமும் அங்கு இல்லை.
ராமரால் சிதறடிக்கப்பட்ட பாலத்தை நிரூபிக்க தொல்பொருள் துறைக்கு நீண்ட அவகாசம் தேவைப்படும்.
இந்த அரசு நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை கடல் வழியே இணைக்க ஒரு கால்வாயை அமைக்கிறது. இதன் மூலம் கப்பல்களுக்கு 424 கடல் மைல் தூரமும் 30 மணி நேரமும் (இலங்கையை சுற்றி வர ஆகும் தூரம்-நேரம்) மிச்சமாகும்.
இத் திட்டத்தால் தமிழகமும் நாடும் பெரும் வளம் பெரும் என்று நாரிமன் தெரிவித்தார்.