கூட்டணி: பாமகவை அழைக்கவில்லை-கருணாநிதி
கடந்த வாரம் ஆங்கில பத்திரிக்கைக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், பாமக இருந்தால் கூட்டணி வலுபெறும் என்றார். இந் நிலையில் கருணாநிதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் திமுக கூட்டணியில் மீண்டும் பாமக சேர வாய்ப்பு இருக்கிறது என்றார்.
ஆனால், கூட்டணி குறி்த்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறிவிட்டார்.
இந்நிலையில் இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர், பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்க திமுக தயாராக இல்லை என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் கருணாநிதி. அதன் விவரம்:
கேள்வி: ப.சிதம்பரம் உங்களை சந்தித்தபோது பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி பேசினாரா?
கருணாநிதி: நான் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை.
கேள்வி: பாமக கூட்டணியை விட்டு விலகியது வருத்தம் அளிப்பதாக கூறினீர்களே?
கருணாநிதி: பிரிந்து செல்வது வருத்தம் அளிப்பது தானே.. சந்தோஷப் படவா முடியும்?
கேள்வி: இந்த வருத்தத்தை போக்குவதற்கான முயற்சிகள் ஏதேனும் நடைபெறுகிறதா?
இந்தக் கேள்விக்கு முதல்வர் நேரடியாக பதிலளிக்காமல் ''இல்லை'' என்று சொல்லும் வகையில் தலையை அசைத்தார்.
இதன்மூலம் பாமகவுக்கு மீண்டும் கூட்டணியில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் கருணாநிதி.
மேலும் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: மேற்கு வங்காளத்தில் பிரச்சினையில் சிக்கியுள்ள டாடாவின் நானோ கார் தொழிற்சாலை தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்புள்ளதா?
கருணாநிதி: இப்போது உள்ள நிலைமையில் டாடா நிறுவனத்தை தமிழகத்துக்கு வருமாறு அழைப்பது சரியல்ல. நாங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. தமிழகத்துக்கு வரப் போவதாக அவர்களும் சொல்லவில்லை.
கேள்வி: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்குமா?
கருணாநிதி: மத்திய அரசிடம் போதுமான மின்சாரம் இருப்பு இல்லை. பல மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு உள்ளது. எனவே மத்திய அரசே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு புதிதானதல்ல. ஏற்கனவே இதே மாதங்களில் இது போன்ற மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை தான்.
கேள்வி: செல்வகணபதி கலர் டி.வி. வழக்கில் தண்டனை பெற்றவர். அவரை திமுகவில் சேர்க்க எதிர்ப்பு கிளம்பியதா?
கருணாநிதி: ஜெயலலிதா மீது கூட தான் வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்றார் பலத்த சிரிப்புக்கிடையே.
கேள்வி: பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு எப்போது சரியாகும்?
கருணாநிதி: அதற்கான நடவடிக்கைகளை தொடர்புடைய துறையினர் எடுத்து வருகிறார்கள். எல்லா அரசியல் நிர்வாகத்திலும் இவை தவிர்க்க முடியாதவை.
கேள்வி: மதச்சார்பற்றதன்மையை கடை பிடிப்பதில் அதிமுக உறுதியாக இருந்தால், அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவே?
கருணாநிதி: அதிமுக மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்கிறது. அதனால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கரசேவைக்கு ஆட்கள் அனுப்பினார்கள் என்றார்.