காங். அமைச்சர் பதவி கேட்டால் பரிசீலனை: கருணாநிதி
திமுகவின் சார்பில் திருச்சியில் இன்று மாலை முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ரயில் மூலம் முதல்வர் கருணாநிதி திருச்சி வந்தார்.
ரயில் நிலையத்தில் செண்டை மேளம் முழங்க அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்டோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசினார். அப்போது, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இதுகுறித்து கருத்து கூறுவது முறையாக இருக்காது.
இருப்பினும், பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும் தமிழ் ஆன்றோர்கள், சான்றோர்கள் கண்ட கனவு இது. இதை நிறைவேற்ற ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் ஓரணியில் திரள வேண்டும் என்ற உறுதியோடு இந்தத் திட்டத்தை திமுக அணுகுகிறது.
அமைச்சரவையில் காங்கிரஸுக்கு பங்கு ...
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினருக்கு பங்கு தருவது குறித்து அக்கட்சி மேலிடம் இதுவரை கோரவில்லை. ஒருவேளை கோரிக்கை விடுத்தால், அதுகுறித்து திமுக பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும்.
சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு ..
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் புகார் கூறினார்கள். அவர்களுக்கு உரிய விளக்கத்தை எடுத்துரைத்துள்ளோம். திருப்தி அடைவார்கள் என நம்புகிறோம்.
அந்த ஒரு மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்டங்களில் மொத்த கிறிஸ்தவ மக்களும் நாங்கள் அளித்த விளக்கத்தை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மேலும் ஏதாவது குறிப்பிட்ட குமரி மாவட்ட மக்களுக்கு ஐயப்பாடு ஏற்படுமாயின் அதை அலட்சியப்படுத்த மாட்டோம்.
திருச்சி அரசு மருத்துவமனை எய்ம்ஸ் அளவுக்கு தரம் உயர்த்த நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முறையாக நடவடிக்ைக எடுக்காததால்தான் மின் தட்டுப்பாடு பெருமளவுக்கு ஏற்பட காரணம். இதை சரி செய்வதோடு, எதிர்காலத்தில் இதுபோல ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்ைக நடவடிகைக எடுக்கப்படும்.
ரூ. 1 அரிசித் திட்டம் ...
அண்ணா நூற்றாண்டு முதல், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை சிலர் விமர்சிக்கிறார்கள். அரிசி தரமாக இல்லை என்று விமர்சிப்பவர்கள்தான் தரம் இல்லாதவர்கள் என்றார் கருணாநிதி.
கலைஞர் அறிவாலயம் திறப்பு:
பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்தார்.
அதன் பின்னர் மாவட்ட திமுக சார்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான கலைஞர் அறிவாலய கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வடிவில் இது கட்டப்பட்டுள்ளது.
கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கையும் முதல்வர் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர் கனிமொழி, போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வென்றவர்களுக்கு பரிசுகள்:
பின்னர் திமுக முப்பெரும் விழாவையொட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
மாநில அளவில் மேல் நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவியர், சிறந்த ஆட்டோ டிரைவர்கள், முரசொலி அறக்கட்டளை சார்பில் நடந்த பாவேந்தர் பாடல் ஒப்புவிக்கும் போட்டியில் வென்றவர்கள், அண்ணா நூற்றாண்டையொட்டி நடந்த பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அண்ணா நூற்றாண்டு விழா மலரை முதல்வர் வெளியிட, அதை அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
மாலையில் முப்பெரும் விழா
திமுகவின் முப்பெறும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் முப்பெறும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவின்போது முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் சமூக விருது வழங்கப்படுகிறது.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமிக்கு அண்ணாதுரை விருதும், ஸ்டாலினுக்கு கலைஞர் விருதும், துரைமுருகனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்படுகிறது.
விழாவில் மாநில அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள், தி.க. தலைவர் கி.வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், காதர் மொய்தீன் எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.