பிபிஓ நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு உதவும் புது சாப்ட்வேர் 'பிபிஓ சூட்'!
சென்னை: பிபிஓ நிறுவனங்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றை அதிகரிப்பதற்கான புதிய பிபிஓ சூட் (BPO Suite) என்கிற சாப்ட்வேரை சென்னையைச் சேர்ந்த ஆரன்ஞ்ஸ்கேப் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2003ம் ஆண்டு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆரன்ஞ்ஸ்கேப் டெக்னாலஜிஸ் சாப்ட்வேர் நிறுவனம். புதிய வகை சாப்ட்வேர்களை உருவாக்கி வெளியிட்டு வரும் ஆரன்ஞ்ஸ்கேப் நிறுவனம் தற்போது பிபிஓ நிறுவனங்களின் பல்வேறு பிரச்சினகளைத் தீர்க்க உதவும் புதிய பிபிஓ சூட் என்கிற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிபிஓ நிறுவனங்களின் செயல்பாடுகளை துல்லியமாக்குதல், பண விரயத்தைக் குறைத்தல், நிர்வாக திறனை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், நேர விரயத்தைக் குறைத்தல் என பல பிரச்சினைகளுக்கு இந்த சாப்ட்வேர் தீர்வாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆரன்ஞ்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் கூறுகையில், பல்வேறு வகையான தொழில்களில் அவுட்சோர்சிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அவற்றைக் கையாளுவதும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் கடினமாகிறது.
இதை சமாளித்து, திட்டமிட்டு செயல்படுவதற்கும், பணிகளை ஒருங்கிணைத்து ஒரே வேகத்தில் கொண்டு செல்வதற்கும், உரிய நேரத்தில் டெலிவரி செய்யவும் இந்த பிபிஓ சூட் உதவும்.
உங்களது ஊழியர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்பதை கண்காணித்து அதற்கேற்றபடி நீங்கள் திட்டமிடவும், பயன்பாட்டை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் இந்த சாப்ட்வேர் உதவும்.
இதன் மூலம் உயர்ந்த தரத்துடன் நம்மால் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும். வர்த்தக மேம்பாட்டையும் இதன் மூலம் எட்ட முடியும்.
சிஜிஎஸ்எல், 247 கஸ்டமர், பிரிமீடியா குளோபர், இநோவா, மெக்மிலன் மற்றும் பல்வேறு பிபிஓ நிறுவனங்களிடமிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்த சாப்ட்வேரை உருவாக்கியுள்ளோம். பிபிஓ நிறுவனங்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாக பிபிஓ சூட் சாப்டவேர் அமைந்துள்ளது என்றார்.