மக்களவையில் பிரதமர் மீது உரிமை மீறல்
டெல்லி: இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அணு ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
அணு ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் ஆதரவை இழந்த மத்திய அரசு மீது கடந்த ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் மன்மோகன் சிங் வெற்றி பெற்றதோடு, அணு ஒப்பந்தத்தையும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது
இந் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு இன்று முதல் முறையாக நாடாளுமன்றம் கூடியது. அடுத்த மாதம் 24ம் தேதி வரை கூட்டத் தொடர்ர் நடக்கிறது.
முக்கிய நகரங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள், மதக் கலவரங்கள், விலைவாசி உயர்வு, பணவீக்கம் என்று பல பிரச்சனைகள் குறித்து எதிர் கட்சிகளின் கேள்வி கனைகளை மத்திய அரசு சந்திக்க உள்ளது.
மேலும் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை தாக்குதல், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு திமுக தலைமையிலான தமிழக கூட்டணி கட்சிகள் கெடு விதித்துள்ளன. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள தமிழக எம்பிக்கள் ராஜினாமா மிரட்டலும் நாடாளுமன்றத்தில் சூட்டைக் கிளப்பும் என்று தெரிகிறது.
பிரதமர் மீது உரிமை மீறல்:
இந்நிலையில் அணு ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மீது உரிமை மீறலை கொண்டு வரும் நோட்டீசை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் அளித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
சோம்நாத்தை சந்தித்து நோட்டீசை அளித்த பிறகு அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, கடந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு வாக்குறுதி அளித்தார். அது ஒப்பந்தம் குறித்து சர்வதேச அணுசக்திக் கழகம் மற்றும் அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அமைப்பிடம் ஆலோசனை நடத்திவிட்டு, மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டி இங்கு அனைவரது ஒப்புதலும் பெறப்படும். அதன்பிறகே, அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்திய நாடாளுமன்றத்துக்கு வராமலேயே, ஒப்பந்தம் நேராக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதிபர் புஷ் கையெழுத்திட்டு, இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதமர் தான் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார். எனவே அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சென்னை அறிவியல் பல்கலை மசோதா:
கடல்சார் அறிவியல் கல்வி பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான மசோதா இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்த மசோதாவை ஏற்கனவே ஒருமுறை தாக்கல் செய்ய முயன்றபோது, அமைச்சர் டி.ஆர். பாலுவை மேற்கு வங்கம் மற்றும் கேரள சிபிஎம் எம்பிக்கள் தாக்க முயன்றது நினைவுகூறத்தக்கது.
பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. சென்னையில் அமைக்கப்படும் பல்கலையின் கிளைகளை கொல்கத்தா உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த கூட்டத்தொடரில் இதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று சிபிஎம் கூறியுள்ளது. இதுகுறித்து பாசுதேவ் ஆச்சார்யா கூறுகையில், சென்னையில் கடல்சார் படிப்புக்கான பல்கலைக்கழகம் அமைக்கும் சட்ட வடிவத்தை ஏற்க மாட்டோம்.
கொல்கத்தாவில்தான் இது அமைக்கப்பட வேண்டும். எனவே, இந்த கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்றார்.