சென்னை கடல் பல்கலை. மசோதா நிறைவேறியது
டெல்லி: சென்னையில் அமைக்கப்படவுள்ள கடல் சார் பல்கலைக்கழக சட்ட மசோதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவில் அமைக்க வேண்டும் என அது கோரி வருகிறது. ஏற்கனவே அங்குள்ள மிரி கடல் சார் மையத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து தர வேண்டும் என அது கோரி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி கடல் சார் சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கடல் சார் பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைக்க கூடாது, கோல்கட்டாவில் ஏற்கனவே உள்ள மிரி கடல்சார் மையத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து தர வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூ., உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது மத்திய கப்பல் போக்கு வரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு பேசுகையில், கடல்சார் பல்கலைக் கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் அமைந்திருக்க வேண்டும். இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக அப்போது நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இந்த பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைக்க காரணம், உத்தண்டியில் 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளித்துள்ளதுதான் என்றார்.
பின்னர் ஒரு வழியாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பாலு பேசுகையில், மும்பை மற்றும் கோல்கட்டாவில் நிலம் கிடைக்காததால், அங்கு பல்கலைக் கழகத்தை அமைக்க முடியவில்லை. இந்த மசோதா மீது லோக்சபாவில் நடந்த விவாதத்தில், சென்னையில் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., உறுப்பினர் சமிக் லகரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மசோதாவை அறிமுகப் படுத்தியபோது, அதனை பிடுங்கி கிழித்துப் போட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள காங்., உறுப்பினர் தாமஸ் கடல்சார் பல்கலைக் கழகத்தை கொச்சியில் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் அமையவுள்ளதற்கு பா.ம.க., தலைவர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா அடுத்த இரண்டு தினங்களில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் அடுத்த ஓராண்டில் சென்னையில் இதற்கான பணிகள் தொடங்கும்.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள கடல்சார் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், சென்னையில் அமையவுள்ள பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும்.
சென்னையில் அமையவுள்ள கடல்சார் பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசு ரூ.300 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2,000 மாணவர்களுக்கு, இந்த பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்கும் என்றார் அவர்.