உ.பி. பத்திரி்க்கையாளர் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல்

மும்பையில் உள்ள நிர்பய் பத்ரிக் என்ற இதழில் பணியாற்றி வருபவர் பத்திரிக்கையாளர் தினாநாத் திவாரி (40). இவர் மலட் அருகே உள்ள குரார் கிராமத்தில், வட இந்தியர்கள் மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்துவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றார்.
அப்போது அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் 15க்கும் மேற்பட்ட ராஜ் தாக்கரே கட்சியினர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் திவாரி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை பகவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. காதிலும் பலத்த காயம் ஏற்பட்டு்ளது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும், இருப்பினும் அவர் படுகாயமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உ.பி. மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் திவாரி. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகிறார்.
தாக்குதல் தொடர்பாக உள்ளூர் கவுன்சிலர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை உ.பியைச்சேர்ந்த ராம் நாராயணன் ராய் என்வர் புறநகர் ரயிலில் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு முன்பாக பீகாரைச் சேர்ந்த ராகுல்ராஜ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் ஓடும் ரயிலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்தேவ் ராய் என்ற கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் உ.பியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டிருப்பது வட இந்தியர்களிடையே மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.
ரயில்களை நிறுத்துவேன்-லாலு எச்சரிக்கை:
பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் ரயில் சேவையை நிறுத்த தயங்க மாட்டோம் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மகாராஷ்டிரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ஓடும் ரயிலில் உத்தரபிரதேச வாலிபர் தரம்தேவ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகக் கடுமையான குற்றம், இது ஒரு தேசிய பிரச்சனை. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறும் மாநிலங்களில் ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு தயங்க மாட்டேன்.
தரம்தேவ் மனைவிக்கு ரயில்வேயில் வேலை:
கொல்லப்பட்ட தரம்தேவின் மனைவிக்கு ரயில்வேயில் வேலையும், ரூ.3 லட்சம் நஷ்டஈடும் வழங்கப்படும் என்றார் லாலு.












Click it and Unblock the Notifications