நாசா விஞ்ஞானிகளில் 36% பேர் இந்தியர்கள்
அலகாபாத் ஐஐஐடி (இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம்) நிறுவனத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் அறிவியல் மாநாடு 15ம் தேதி தொடங்கியது. மாநாட்டை ஹரியானா மாநில ஆளுநர் ஏ.ஆர்.கித்வாய் தொடங்கி வைத்து பேசுகையில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், 36 சதவீத இந்திய விஞ்ஞானிகளும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்கள் பலவற்றின் மூளையாகவும் இவர்கள் திகழ்கிறார்கள்.
அதேபோல, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உள்ள புரோகிராமர்களில் 35 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். தொழில்நுட்பம் மற்றும் ஆய்வின் மெக்கா என அழைக்கப்படும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில்
பணியாற்றும் பேராசிரியர்களில் 12 பேர் இந்தியர்கள்தான்.
உலக அளவில் கணிதவியல் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கக் காரணமே இந்தியர்கள் கண்டுபிடித்த பூஜ்யம்தான். அதேபோல டெசிமல் முறையை அறிமுகப்படுத்தியதும் இந்தியர்கள்தான்.
கணிதவியலில் மாபெரும் நிபுணர்களாக இந்தியர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எண் கணித முறையில் உலகிலேயே சிறந்தவர்கள் இந்தியர்கள்தான்.
மேலும் இந்தியாவில்தான் மருந்துகளுக்கான சோதனை முயற்சிள் முன்னணியில் உள்ளன. உலக அளவில் அதிக அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் இந்தியாவில்தான் உள்ளன. இங்குதான் அதிக அளவிலான சாப்ட்வேர் என்ஜீனியர்கள் உள்ளனர். உலகின் முன்னணியில் உள்ள 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்றார் கித்வாய்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதரும், திட்டக் கமிஷனின் உறுப்பினருமான டாக்டர் அபீத் ஹூசேன் கூறுகையில், நமது இளைஞர்கள் மனதில் அறிவியல் மீதான ஈடுபாட்டை அதிகப்படுத்த வேண்டும். சிந்திக்கும் திறனை நம்மவர்களிடம் ஊக்குவிக்க வேண்டும். ஆய்வுக்கான ஆர்வத்தை அவர்களிடம் விதைக்க வேண்டும். திறமை இருந்தும், மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாக நாம் வர முடியாமல் இருப்பதற்கு இந்த ஆர்வமும், சிந்தனைக்கான ஊக்கமும் நம்மிடம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம் என்றார் அவர்.
மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நோபல் விஞ்ஞானி கிளாட் கோஹன் டன்னோட்ஜி கூறுகையில், இந்திய விஞ்ஞானிகளும், மாணவர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
(மும்பைத் தாக்குதலைக் குறிப்பிட்டு) பொறுமையின்மையை வீழ்த்த ஒரே ஆயுதம் அறிவியல்தான். மதவாதத்திற்கும், இனவாதத்திற்கும், குறுகிய கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியின் மீதும், அறிவியல் ஆய்வுகளின் பக்கம் நமது இளைஞர்களைத் திருப்புவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றார்.
அலகாபாத் ஐஐஐடியின் முன்னாள் இயக்குநரான டாக்டர் எம்.டி. திவாரியின் முயற்சியால் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சர்வதேச நோபல் பரிசு பெற்றவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு, ஆசியாவிலேயே முதல் முறையாக நடந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த பெருமையை அலகாபாத் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் பெற்றுள்ளது.
15ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக நோபல் பரிசு பெற்றவர்களுடன் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மனித வளத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுடன் இணைந்து அலகாபாத் ஐஐஐடி இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஐஐடி, 2000மாவது ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.